இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்
சமாதானமான உலகம் நிச்சயம் வரும்!
சமாதானமான ஒரு உலகத்தில் வாழத்தான் எல்லாரும் ஏங்குகிறார்கள். சண்டைகளை ஓய வைக்கவும், சமாதானத்தை வாழ வைக்கவும் நிறைய உலகத் தலைவர்கள் ஆயிரக்கணக்கான வருஷங்களாக முயற்சி செய்திருக்கிறார்கள். அவர்களுடைய முயற்சியால், கொஞ்ச காலத்துக்கு ஓரளவு நிம்மதி இருந்திருக்கிறது. ஆனால் வருத்தகரமாக, மறுபடியும் சண்டைகள் வந்திருக்கின்றன. இந்த உலகம் என்றைக்காவது ஒரு சமாதானச் சோலையாக மாறுமா? நிச்சயமாக! அதற்காக இயேசு என்ன செய்யப்போகிறார், அதைப் பற்றி என்ன சொல்லிக்கொடுத்தார் என்று பார்க்கலாம்.
இயேசு என்ன செய்யப்போகிறார்
இந்த உலகத்தில் சமாதானத்தை வாழ வைக்க இயேசு என்ன செய்யப்போகிறார் என்று பைபிள் சொல்கிறது.
’[இயேசு] சமாதானத்தின் அதிபதி என்று அழைக்கப்படுவார். அவருடைய ஆட்சியின் வளர்ச்சிக்கும் சமாதானத்துக்கும் முடிவே இருக்காது.’ (ஏசாயா 9:6, 7) கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக, இயேசு உலகம் முழுவதும் சமாதானத்தை கொண்டுவருவார்; அது என்றென்றும் நிலைத்திருக்கும்.
“ஏழைகளின் கூக்குரலைக் கேட்டு அவர் உதவி செய்வார். எளியவனுக்கும் ஆதரவற்றவனுக்கும் கைகொடுப்பார்.” (சங்கீதம் 72:12-14) இயேசு அவருடைய அதிகாரத்தை வைத்து, நீதியை நிலைநாட்டுவார்; போரையும் வன்முறையையும் கஷ்டங்களையும் ஒழித்துக்கட்டுவார்.
“ஒரு ஜனத்துக்கு எதிராக இன்னொரு ஜனம் வாள் எடுக்காது. போர் செய்ய இனி யாரும் கற்றுக்கொள்ள மாட்டார்கள்.” (ஏசாயா 2:4) இயேசு ஆட்சி செய்யும்போது, மனிதர்கள் போர் செய்வதற்குப் பதிலாக சமாதானமாக வாழத்தான் கற்றுக்கொள்வார்கள்.
சமாதானமான உலகத்தை கொண்டுவர இயேசு என்ன செய்வார் என்றும் அதில் வாழ நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் தெரிந்துகொள்ள கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன? என்ற சிறிய வீடியோவைப் பாருங்கள்.
இயேசு என்ன சொல்லிக்கொடுத்தார்
இயேசு சொல்லிக்கொடுத்த விஷயங்கள், சமாதானமாக வாழ லட்சக்கணக்கான மக்களுக்கு இன்றும் உதவி செய்கின்றன. பிரபலமான அவருடைய மலைப்பிரசங்கத்தில், மக்கள் ஒருவரோடு ஒருவர் சமாதானமாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று இயேசு சொன்னார். அவர் சொன்னதில் சிலவற்றை பார்க்கலாம்:
“சமாதானம் பண்ணுகிறவர்கள் சந்தோஷமானவர்கள்.” (மத்தேயு 5:9) சண்டைபோடாமல் இருந்தால் மட்டும் போதாது, சமாதானம் பண்ணவும் வேண்டும் என்று இயேசு தன் நண்பர்களிடம் சொன்னார்.
“முதலில் [உங்கள் சகோதரனோடு] சமாதானமாகுங்கள்; பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.” (மத்தேயு 5:23, 24) சண்டைகளை உடனுக்குடன் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று இயேசு சொல்லிக்கொடுத்தார். மற்றவர்களோடு சமாதானமாக இருந்தால்தான், கடவுளுடைய நண்பராக இருக்க முடியும் என்றும் சொன்னார்.
“மற்றவர்களை நியாயந்தீர்ப்பதை நிறுத்துங்கள், அப்போதுதான் நீங்கள் நியாயந்தீர்க்கப்பட மாட்டீர்கள்.” (மத்தேயு 7:1) மற்றவர்களைப் பற்றி தவறாக முடிவுகட்டினாலோ, அவர்களிடம் அளவுக்கு அதிகமாக எதிர்பார்த்தாலோ சண்டைதான் வரும்; அதனால் அப்படி செய்யக்கூடாது என்று இயேசு எச்சரித்தார். குறை கண்டுபிடிப்பதற்குப் பதிலாக, மற்றவர்களுடைய தவறுகளை “மன்னித்துக்கொண்டே” இருக்க வேண்டும் என்று அவர் சொல்லிக்கொடுத்தார்.—லூக்கா 6:37.
உலகம் முழுவதும் இருக்கிற நிறைய பேர், இயேசு சொல்லிக்கொடுத்த மாதிரி வாழ்கிறார்கள். வன்முறையும் பிரிவினைகளும் அதிகமாக இருக்கும் இடங்களில்கூட, கோபப்படாமல் பிரச்சினைகளை தீர்க்கவும் மன்னிக்கவும் அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். கடுகடுவென வெடிப்பவர்கள் மேலும், அன்பு மழையைப் பொழிய கற்றுக்கொள்கிறார்கள்!
இயேசு சொல்லிக்கொடுத்த விஷயங்கள், சமாதானத்தை கண்டுபிடிக்க எப்படி சிலருக்கு உதவிசெய்திருக்கிறது என்று தெரிந்துகொள்ள, “மனக்காயம் இருந்தாலும் மன அமைதி கிடைத்தது“ என்ற கட்டுரையைப் படியுங்கள்.