யார் அந்திக்கிறிஸ்து?
பைபிள் தரும் பதில்
அந்திக்கிறிஸ்து என்பது ஒரு தனி நபரை அல்லது ஒரு அமைப்பை மட்டுமே குறிப்பதில்லை. ஏனென்றால், “அந்திக்கிறிஸ்துக்கள் நிறைய பேர்” வருவார்கள் என்று பைபிள் சொல்கிறது. (1 யோவான் 2:18) “கிறிஸ்துவுக்கு எதிராக (அல்லது பதிலாக)” என்ற அர்த்தத்தை தருகிற கிரேக்க வார்த்தையிலிருந்து அந்திக்கிறிஸ்து என்ற வார்த்தை வருகிறது. அதனால், “அந்திக்கிறிஸ்து” என்பது கீழே சொல்லப்பட்ட விஷயங்களை செய்கிற யாரை வேண்டுமானாலும் குறிக்கலாம்:
இயேசுவை கிறிஸ்து (மேசியா) என்று மறுப்பது அல்லது கடவுளுடைய மகன் என்று மறுப்பது.—1 யோவான் 2:22.
கிறிஸ்துவை, அதாவது கடவுளால் அபிஷேகம் செய்யப்பட்டவரை, எதிர்ப்பது.—சங்கீதம் 2:1, 2; லூக்கா 11:23.
தன்னையே கிறிஸ்து என்று சொல்லிக்கொள்வது.—மத்தேயு 24:24.
கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களை துன்புறுத்துவது. ஏனென்றால், அவர்களை துன்புறுத்துவது தன்னையே துன்புறுத்துவதற்கு சமம் என்று இயேசு நினைக்கிறார்.—அப்போஸ்தலர் 9:5.
கிறிஸ்தவனாக வெளிவேஷம் போட்டுக்கொண்டு அக்கிரமம் செய்வது, ஏமாற்று வேலையில் ஈடுபடுவது.—மத்தேயு 7:22, 23; 2 கொரிந்தியர் 11:13.
இப்படிப்பட்ட செயல்களை செய்கிற தனி நபர்களை அந்திக்கிறிஸ்து என்று பைபிள் அழைக்கிறது. அதுமட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக இவர்களைப் பற்றி சொல்லும் போதும் “அந்திக்கிறிஸ்து” என்றே சொல்கிறது. (2 யோவான் 7) முதன்முதலில் அப்போஸ்தலர்கள் வாழ்ந்த காலத்தில்தான் அந்திக்கிறிஸ்து தோன்றியது. அன்றுமுதல் இன்றுவரை முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. இதைப் பற்றி பைபிள் முன்கூட்டியே சொன்னது.—1 யோவான் 4:3.
அந்திக்கிறிஸ்துவை எப்படி அடையாளம் காண்பது?
இவர்கள் இயேசுவைப் பற்றி பொய்யான கருத்துகளைப் பரப்புவார்கள். (மத்தேயு 24:9, 11) அதற்கு ஒரு உதாரணம்: “என் தகப்பன் என்னைவிட பெரியவர்” என்று இயேசு சொன்னார். (யோவான் 14:28) அதனால், திரித்துவத்தையோ இயேசுதான் சர்வ வல்லமையுள்ள கடவுள் என்றோ கற்றுக்கொடுக்கிறவர்கள் இயேசுவின் போதனைகளுக்கு எதிரானவர்கள்.
இவர்கள், கடவுளுடைய அரசாங்கம் எப்படி செயல்படும் என்பதைப் பற்றி இயேசு சொன்னதை ஏற்றுக்கொள்வதில்லை. அதற்கு ஒரு உதாரணம்: “என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தைச் சேர்ந்ததல்ல” என்று இயேசு சொன்னார். (யோவான் 18:36) ஆனால், சில மதத் தலைவர்கள் மனித அரசாங்கங்கள் மூலமாக இயேசு செயல்படுகிறார் என்று சொல்கிறார்கள். இது இயேசுவின் போதனைகளுக்கு எதிரானது.
இவர்கள் இயேசுவை தங்களுடைய எஜமானர் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதில்லை. அதில், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி பிரசங்கிக்கும்படி இயேசு சொன்ன கட்டளையும் அடங்கும்.—மத்தேயு 28:19, 20; லூக்கா 6:46; அப்போஸ்தலர் 10:42.