ஆர்த்தடாக்ஸ் குருவர்க்கம் விழிப்புடனுள்ளதா?
கிரீஸிலிருந்து விழித்தெழு! நிருபர்
“இயேசு ஆலயத்திற்குள் நுழைந்து . . . ‘வணிக சந்தையை’ பார்த்தபோது, கோபமடைந்து இவ்வாறு சப்தமிட்டார்: ‘என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள்!’ பத்மு தீவிற்கு இப்போது அவர் பயணம்செய்தால், . . . இன்னும் அதிக புண்படுத்தும் விதமாக அவர் பேசுவார். ஆனால் எவராவது அவர் சொல்வதைக் கேட்பார்களா என்று எனக்கு நிச்சயமாக தெரியவில்லை.” இவ்வாறு, “மிக முக்கியத்துவம் வாய்ந்த கூட்டு-கிறிஸ்தவ கூட்டம்” மற்றும் “நவீன கிறிஸ்தவத்தின் முக்கியமான நொடிகளில் ஒன்று” என்பதாக அழைக்கப்பட்ட ஒன்றைக் குறித்து அறிக்கை செய்யும்போது ஒரு பத்திரிகையாளர் புலம்பினார்.
கான்ஸ்டன்டினோபிளிலுள்ள அனைத்து சர்ச்சுகளுக்கு பிஷப்பும் உலகளாவிய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் அடையாளப்பூர்வமான தலையாக கருதப்படுபவருமான பார்த்தலெம்யூ I, 1995-வது வருடத்தை “திருவெளிப்பாட்டின் ஆண்டு” என்பதாக அறிவித்தார். a செப்டம்பர் 23-27, 1995-லிருந்து, பெரும்பான்மையான ஆர்த்தடாக்ஸ் பிஷப்புகளின் அலுவலகங்களைச் சேர்ந்த உயர்பதவியிலுள்ள குருமார் பத்மு தீவில் ஒன்றுகூடியபோது கொண்டாட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டின. ரோமன் கத்தோலிக்க சர்ச், ஆங்கிலிக்கன் சர்ச் மற்றும் பல்வேறு புராட்டஸ்டன்ட் பிரிவுகளுடைய பிரதிநிதிகளும் அங்கு ஆஜராயிருந்தனர். கிரீஸின் அரசியல் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள், உலகம் முழுவதிலுமுள்ள அயல்நாட்டு அலுவலகர்களோடும் அரசியல்வாதிகளோடும் பேர்போன வியாபாரிகளோடும் அழைக்கப்பட்டிருந்த மற்ற விருந்தாளிகளோடும் நிகழ்ச்சிகளுக்கு ஆஜராயிருந்தனர்.
‘இதோ திருடனைப்போல் வருகிறேன். விழித்துக்கொண்டிருப்பவன் பாக்கியவான்’ என்பது அந்தப் புத்தகத்தில் இயேசு கிறிஸ்துவால் கொடுக்கப்பட்டிருக்கும் அவசர நினைப்பூட்டுதலை வெளிப்படுத்துதல் புத்தகத்தை படிப்பவர்கள் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள். (வெளிப்படுத்துதல் 16:15) இதையும் வெளிப்படுத்துதலைச் சுற்றி சுழலும் இந்த அதிக விளம்பரப்படுத்தப்பட்ட மத கொண்டாட்டத்தையும் கருத்தில்கொள்ளும்போது, நம்மால் இந்தக் கேள்வியைக் கேட்காமல் இருக்க முடியாது: கிறிஸ்தவமண்டலம் விழிப்புடனிருக்கிறதா? அரியணையில் ஏற்றப்பட்ட ராஜாவாக இயேசு கிறிஸ்து வருவதை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்களாக, அவர்கள் விழிப்புடனிருக்கிறார்களா? இந்தக் கொண்டாட்டங்கள், வெளிப்படுத்துதலில் உச்சக்கட்டத்தை அடையும் பைபிளின் முக்கிய பொருளுக்கு—கிறிஸ்துவின் அதிகாரத்தின்கீழுள்ள ராஜ்யத்தின் மூலம் யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுத்தப்பட்டு அவரது பேரரசாட்சி நியாயநிரூபணம் செய்யப்படுவதற்கு—கவனம் செலுத்தினவா? சில உண்மைகளை நாம் சிந்திப்போமாக.
இந்த உலகத்தின் பாகமா?
கொண்டாட்டங்களின்போது மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் வியாபாரிகளுக்கிடையே இருந்த நிலையற்ற உடன்பாடு கவனித்துக்கொண்டிருந்த அநேகருக்கு முழுமையாகவே ஆட்சேபத்துக்குரியதாக இருந்தது. அதில் கலந்துகொண்ட அனைத்து தரப்பினரும் தங்களுடைய சுயநலத்திற்காகவே சூழ்நிலையை பிரயோஜனப்படுத்திக்கொண்டனர் என்பதாக சிலர் உணர்ந்தனர். பிரபல அரசியல்வாதிகளுக்கு அருகாமையில் நிற்பதன் மூலம் குருமார் தங்களது செல்வாக்கை மிகைப்படுத்தினர்; அரசியல்வாதிகளோ, பொதுமக்களின் மத உணர்ச்சிகளைப் பயன்படுத்திக்கொள்வதன் மூலம் தங்களது சொந்த கௌரவத்தை முன்னேற்றுவிக்க முயன்றனர். கிரீஸிலுள்ள சர்ச்சின் பரிசுத்த குருமார் கூட்டத்திற்கான சார்புப்பேச்சாளர் இவ்வாறும் குறிப்பிட்டார்: “வெளிப்படுத்துதல் அரசியல் சம்பந்தத்தையும் கொண்டிருந்தது . . . அது பூமியில் உருவாகும் ஒரு நாடகம்.”—நேரெழுத்துக்கள் எங்களுடையவை.
வெளிப்படுத்துதல் 17:1, 2-ல் காணப்படும் விவரத்தோடு இது எவ்வளவு நன்றாக பொருந்துகிறது; அதில், கிறிஸ்தவமண்டலத்தை முக்கிய பாகமாக கொண்டிருக்கும் பொய் மதங்களின் உலகப் பேரரசான அடையாளப்பூர்வமான “மகா வேசி,” ‘பூமியின் ராஜாக்களோடு’ ஆவிக்குரிய விதமாக “வேசித்தனம்” செய்வதாக காண்பிக்கப்பட்டிருக்கிறது! ஆவிக்குரிய விதமாக சுத்தமாகவும் கவனமாகவும் இருப்பதற்குப் பதிலாக, ஆர்த்தடாக்ஸ் சர்ச், மற்ற கிறிஸ்தவமண்டலத்தினரைப்போல், அரசியல் ஆட்சியாளர்களை தன்னுடன் அசுத்த உறவை வைத்துக்கொள்ளும்படி வசீகரித்து, மத துன்புறுத்துதலை முக்கியமாக யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக தூண்டிவிட்டிருக்கிறது.
ஒன்றுபட்டு இல்லை
இரண்டு ஆர்த்தடாக்ஸ் பிஷப்புகள் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏன்? எதிர்நடவடிக்கையாக, மாஸ்கோவைச் சேர்ந்த பிஷப்பான ஆலெக்ஸ்யோஸ் II, எஸ்டோனியா மற்றும் உக்ரேனின் இரு ஆர்ச்டையாஸிஸ்களும் தங்களை மாஸ்கோவிற்குப் பதிலாக கான்ஸ்டன்டினோபிளின் அதிகார எல்லைக்குள் வைக்கும்படி கேட்டு அளித்த மனுவை கான்ஸ்டன்டினோபிளின் பிஷப் ஏற்றுக்கொண்டதன் காரணமாக கொண்டாட்டத்திற்கு வர மறுத்துவிட்டார். அறிக்கைகளின்படி, “இது [கான்ஸ்டன்டினோபிளின் பிஷப்] மற்றும் அதைக் காட்டிலும் பலமான ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சர்ச் ஆகியவற்றிற்கிடையே உள்ள உறவின்பேரில் எப்போதுமிராத அளவில் எழும்பியிருக்கும் மிகவும் கவலைக்குரிய நெருக்கடியாக இருக்கிறது; இது ஆர்த்தடாக்ஸின் ஐக்கியத்திற்கும் அதிகாரத்திற்கும் முன்னுரைக்க முடியாத விளைவுகளை” உண்டாக்கும் அச்சுறுத்தலை அளிக்கிறது.
மேலும், எருசலேமின் பிஷப், கூட்டத்தை புறக்கணித்து ஒதுக்கினார். ஏன்? ஆஸ்திரேலியாவின் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சி செய்ததன் காரணமாக கான்ஸ்டன்டினோபிளின் பிஷப்பினால் மூன்று வருடங்களுக்கு முன்னர் அவர் செலுத்தவேண்டியதாயிருந்த பிராயச்சித்தத்தைக் குறித்து கோபத்திலிருந்தார்.
ஆரம்பத்தில், போப் ஜான் பால் II அழைக்கப்படவிருந்தார்; ஆனால் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுக்குள்ளே இருந்த பழமைவாத வகுப்பினரால் எழுப்பப்பட்ட பலமான எதிர்ப்பின் காரணமாக அது கடைசி நிமிடத்தில் மாற்றப்பட்டது. மே 1995-ல், ஆதன்ஸிலுள்ள முதன்மையான ஆர்த்தடாக்ஸ் மதகுரு போப்பை “ஒரு போர் குற்றவாளி” என்பதாக அழைத்தார். பின்பு அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் “போப் . . . பத்முவில் நடக்கும் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள முடியாது” என்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த விசனகரமான சூழ்நிலையை இன்னும் மோசமாக்கியது என்னவென்றால், இந்தக் கொண்டாட்டங்களின்போது பத்முவுக்கு வடமேற்கே வெறும் 1,500 கிலோமீட்டர் தொலைவில் ஆர்த்தடாக்ஸ் மற்றும் ரோமன் கத்தோலிக்க “கிறிஸ்தவர்கள்” பாஸ்னியாவிலும் ஹெர்ட்ஸகோவினாவிலும் ஒருவரையொருவர் கொலைசெய்துகொண்டிருந்த முரண்நகைச்சுவையாகும்!
தெளிவாகவே, ஆவிக்குரிய மந்தத்திலிருக்கும் கிறிஸ்தவர்களென்று சொல்லிக்கொள்பவர்கள், மதப்பிரிவினை தங்களை பிரிக்கும்படி அனுமதித்திருக்கின்றனர்! இந்த ஒற்றுமையின்மையை குற்றப்படுத்துபவராய், வட மற்றும் தென் அமெரிக்காவின் ஆர்த்தடாக்ஸ் தலைமை பேராயரான யாகோவாஸ், ஒரு பேட்டியில் இவ்வாறு கூறினார்: “இந்த உலகத்தின் அதிகாரமுள்ளோருக்கு அல்ல ஆனால் மனிதவர்க்கத்துக்கு பணிவிடை செய்யும்படியாக சர்ச்சுகள் ஒன்றுபடுவதை பார்ப்பதற்கான நம்முடைய முயற்சியில் நாம் தோல்வியைக் கண்டிருக்கிறோம். . . . பிஷப்பின் ஆசியை . . . குறித்து ஜனங்கள் சலித்துப்போய்விட்டிருக்கின்றனர்.”
“சுகபோகத்தின் ஒரு ‘வெளிப்படுத்துதல்’ ”
“ஐசுவரியத்தின் பகட்டான ஒரு காட்சி” என்பதாக அழைக்கப்பட்ட அது, நுட்பமாக ஆராயப்பட்டது. செய்தித்தாளின் ஓர் அறிக்கை இவ்வாறு குறிப்பிட்டது: “பத்முவில் நடந்த நான்கு நாள் கொண்டாட்டங்கள் சுகபோகத்தின் ‘வெளிப்படுத்துதலாக’ முடிவில் நிரூபித்தன. . . . கிரேக்க திருச்சபையின் மாயக்கவர்ச்சி சர்ச் கொண்டாட்டத்தின் வரையறைகளைத் தாண்டிச்சென்று, கிறிஸ்தவ திருச்சபையின் நிகழ்ச்சியை ஆடம்பரமான விழாவாக மாற்றுவதாய் அச்சுறுத்தியது.” இந்தக் கொண்டாட்டங்களின்போது, முக்கியமாக அருகாமையிலிருந்த பால்கன் நாடுகளிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் ஜனங்கள் உயிர்வாழ்வது அச்சுறுத்தப்பட்டிருந்த அந்தச் சமயத்தில் செலவான பணத்தைக் குறித்து அநேகர் கவலைப்பட்டனர். சில கணக்கீடுகள் இந்த “முன்சம்பவித்திராத களியாட்டத்திற்கு” செய்யப்பட்ட செலவு சுமார் $1 கோடியே 70 லட்சம் (ஐ.மா.) என்பதாக காண்பித்தன. கூட்டத்திற்கு வரும்படி அழைக்கப்பட்டிருந்த பணக்கார விருந்தினர் சிலருக்கு இடமளிக்க சொகுசு சுற்றுலா கப்பல்கள் பத்மு துறைமுகத்திற்கு வந்தன. இத்தீவு, அநேக நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு வெறுப்பூட்டும் வகையில், ஓர் ஆஸ்பத்திரியையும் நல்ல பள்ளிக் கட்டிடத்தையும் கொண்டில்லாத இத்தீவு, உயர் பதவிகளிலிருந்த வருகையாளர்களுக்கு மேம்பட்ட அபிப்பிராயத்தை அளிப்பதற்கு கடைசி நிமிடத்தில் நவீனப்படுத்தப்பட்டது.
வெளிப்படுத்துதல் 18:2, 3, 7-ல் உள்ள வார்த்தைகள் இந்தச் சூழ்நிலைக்கு எவ்வளவு சரியாக பொருந்துகின்றன: “பூமியின் வர்த்தகர் அவளுடைய [மகா பாபிலோனுடைய] செல்வச்செருக்கின் மிகுதியினால் ஐசுவரியவான்களானார்கள். அவள் தன்னை மகிமைப்படுத்தி, செல்வச்செருக்காய் வாழ்ந்ததெவ்வளவோ அவ்வளவாய் வாதையையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுங்கள்”! பொது ஜனங்கள் துன்பப்படும் சமயத்தில், ஆர்த்தடாக்ஸ் சர்ச், ஆறுதலும் ஆவிக்குரிய உதவியும் அளிக்க விழிப்புடனிருப்பதற்குப் பதிலாக, ஆவிக்குரிய விதத்தில் அர்த்தமற்ற விழாக்களின் ஊதாரித்தனத்தில் முழு கவனத்தைச் செலுத்தியிருந்தது.
பொய் எதிர்பார்ப்புகளை வளர்த்தல்
இந்தக் கொண்டாட்டத்தின்போது, அநேக தொடர்பேச்சுகளும் கருத்தரங்குகளும் நடைபெற்றன. மனிதவர்க்கம் எதிர்ப்படும் பெரிய பிரச்சினைகளைக் கையாள தீர்வுகள் முன்மொழியப்பட்டன. மனிதவர்க்கத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அவசரமான நடவடிக்கை எடுக்க விஞ்ஞானிகளுக்கு வேண்டுகோள் விடுவித்து ஒரு தீர்மானம் வெளியிடப்பட்டது. கடவுளுடைய ராஜ்யம் ஒருமுறைகூட குறிப்பிடப்படவில்லை. அதற்கு எதிர்மாறாக, வெளிப்படுத்துதல் புத்தகம், பைபிளின் மற்ற பாகங்களுக்கு இசைவாக, மனிதவர்க்கத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்தின்கீழுள்ள கடவுளுடைய ராஜ்யம் என்பதாக வலியுறுத்துகிறது.—வெளிப்படுத்துதல் 11:15-18; 12:10; 21:1-5.
கிறிஸ்தவமண்டலம் பைபிள் அடிப்படையிலான ராஜ்ய நம்பிக்கையை முக்கியமானதாக எடுத்துக்கொள்வதில்லை என்பது ஆச்சரியமல்லவே. வியாபித்திருக்கும் மனப்பான்மையை எதிரொலிப்பவராய், பத்மு மடாலயத்தின் சந்நியாசி ஒருவர் இவ்வாறு வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்: “நாங்கள் வெளிப்படுத்துதலை அதிகாரப்பூர்வமான புத்தகமாக பாவிப்பதில்லை. சர்ச்சுகளில் வாசிக்கப்படாத வேதவாக்கியமாக அது இருக்கிறது.” அதேவிதமாக, இறைமையியல் வல்லுநர் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “என்ன நடக்கப்போகிறது என்பதை விவரமாக விளக்கக்கூடிய ஒரு புத்தகமாக நினைப்பதன் அர்த்தத்தில் வெளிப்படுத்துதலை இந்த உலகத்தின் சரித்திரத்தோடு இணைப்பது ஆபத்தானது. . . . இது ஆதாரமற்றதும் ஆபத்தான விளக்கமாகவும் இருக்கிறது.” என்னே ஓர் ஆவிக்குரிய தூக்கம்!
அவர்கள் விழிப்புடனில்லை
அப்படியானால், தெளிவாகவே கிறிஸ்தவமண்டலம் விழிப்புடனில்லை. இந்தக் கொண்டாட்டம், கடவுளுடைய வார்த்தையின்மீதும் அவரது வாக்குறுதிகளின்மீதும் கவனத்தைத் திருப்புவதற்கு மாறாக அர்த்தமற்ற உபயோகமற்ற மத “விழாவாக” இருந்தது. கிறிஸ்தவ சர்ச்சுகளென்று உரிமைபாராட்டிக்கொள்பவற்றின் நிலைமை லவோதிக்கேயா சபையிலிருந்ததற்கு மிகவும் ஒத்திருக்கிறது; அந்தச் சபைக்கு இயேசு இவ்வாறு சொன்னார்: ‘நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறாய்.’—வெளிப்படுத்துதல் 3:17.
அக்கறையூட்டும் விதமாக, ஆர்த்தடாக்ஸ் சர்ச்சை முழுமூச்சோடு ஆதரித்த ஒருவர், “இந்தக்” கொண்டாட்டத்திலிருந்து “நன்மையடைந்த ஒரே வகுப்பினர்” யெகோவாவின் சாட்சிகள் என்று குறைசொல்லி செய்தித்தாளுக்கு எழுதினார். அவர் ஏன் அவ்வாறு நினைத்தார்? யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்டதும் “யெகோவாவின் சாட்சிகளுடைய கோட்பாடு சம்பந்தமான நிலைநிற்கையும் மனிதவர்க்க சரித்திரத்தின் முடிவான சம்பவங்களைப் பற்றி ஒரு பொதுவான அடிப்படையைக் கொண்டிருக்கின்றன” என்பதாக அவர் விளக்கினார். ஆம், கடவுளுடைய நோக்கத்தின் நிறைவேற்றத்திற்கு கவனத்தைச் செலுத்துவதன்மூலம், சாட்சிகள் ‘விழிப்புடனிருக்க’ ஊக்கமாக முயற்சி செய்கின்றனர் என்பது உண்மை. எல்லா நேர்மை இருதயமுள்ள ஜனங்களும் ‘மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு எப்பொழுதும் விழித்திருக்க’ உதவுவதில் ஆர்வமுள்ளவர்களாகவும் அவர்கள் இருக்கின்றனர்.—மத்தேயு 24:42; லூக்கா 21:36.
[அடிக்குறிப்பு]
a அவ்வருடம், கிறிஸ்தவமண்டலத்தின் காலக்கணிப்பின்படி, பத்முவில் வெளிப்படுத்துதல் புத்தகம் (கிரேக்கில் அப்போகேலிப்ஸ்) எழுதப்பட்டதன் 1,900-வது ஆண்டாக இருந்தது. பொ.ச. 96-ல் வெளிப்படுத்துதல் எழுதப்பட்டது என்பதாக நம்பத்தகுந்த அத்தாட்சி காண்பிக்கிறது.
[பக்கம் 20-ன் சிறு குறிப்பு]
“ஐசுவரியத்தின் பகட்டான ஒரு காட்சி” மற்றும் “முன்சம்பவித்திராத களியாட்டம்”
[பக்கம் 21-ன் சிறு குறிப்பு]
“பிஷப்பின் ஆசியை . . . குறித்து ஜனங்கள் சலித்துப்போய்விட்டிருக்கின்றனர்”