ஜாதகங்களை நம்ப முடியுமா?
இரண்டாம் உலகப் போரின்போது நடந்த பயங்கரமான குற்றச் செயல்களில் டாக்டர் மார்சல் பெதியோ நடப்பித்தவை இடம் பெறுகின்றன. நாசிக்கள் குடியிருந்த பிரான்ஸிலிருந்து ஜனங்களைப் பாதுகாப்பான ஒரு வழியில் வெளியே அழைத்துச் செல்வதாகச் சொல்லி அவன் தன் பிழைப்பை நடத்திக் கொண்டிருந்தான். அவன் தன்னுடைய வாடிக்கையாளர்களைக் கொலை செய்து, அவர்களுடைய உடைமைகளைக் கொள்ளை அடித்து சுண்ணாம்புக் கிளிஞ்சல் தொட்டியில் அவர்களுடைய சடலங்களைக் கரையச் செய்தான். கடைசியாக பெதியோ கண்டு பிடிக்கப்பட்டான். தான் 63 பேரை கொன்றிருப்பதாக அவனுடைய சிறை தனி அறையில் ஒப்புக்கொண்டான். ஆனால் இதற்கும் ஜாதகங்களுக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது?
சுமார் முப்பது ஆண்டுகளாக சோதிடர்களின் உரிமைப் பாராட்டுதல்களை ஆராய்ச்சி செய்திருக்கும் டாக்டர் மைக்கல் காக்குலின் பெதியோவை ஒரு முன்மாதிரி வழக்காக எடுத்துக் கொள்ளத் தீர்மானித்தார். பெதியோவின் பிறந்த தேதியை அவர் ஒரு தேர்ச்சி பெற்ற சோதிடருக்கு அனுப்பி வைத்தார். இந்தச் சோதிடர் பெதியோவின் ஜாதகத்தைக் கம்ப்யூட்டரின் துணைகொண்டு கணித்தார். பின்பு காக்குலின் ஜாதகம் கணிக்க விரும்பிய எவருக்கும் இலவசமாக தனிப்பட்ட ஜாதகத்தைத் தான் கணித்துக் கொடுப்பதாக பிரெஞ்சு செய்தித் தாள் ஒன்றில் விளம்பரம் செய்தார். அவர் உண்மையில் அவர்களுக்கு அனுப்பி வைத்தது என்னவென்றால் கொலை பாதகனாகிய டாக்டர் பெதியோவின் ஜாதகம்!
எவராவது தான் “தவறான” ஜாதகத்தைப் பெற்றுக் கொண்டதை உணர்ந்தார்களா? எதிர்மாறாக, நடந்ததை எழுதுகிறார் காக்குலின்: “பன்னிரண்டு பேர் இதைப் பெற்றுக் கொண்டதற்காக உற்சாகமாக கடிதங்களை எழுதியிருந்தார்கள். தொண்ணூறு சதவிகிதத்தினர் இந்த வருணனை மிகவும் உண்மையாக இருப்பதாகவும் தங்களுடைய தனிப்பட்ட பிரச்னைகளைத் தெளிவாக விளக்குவதாகவும் சொன்னார்கள்.” காக்குலின் தொடர்ந்து சொல்கிறார்: “நம்முடைய ஜாதகம் நம்மை கண்ணாடி போல நிழலிட்டுக் காண்பிக்கிறது என்பதாக மனோதத்துவ ஞானிகள் கற்பித்திருக்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு நபருக்கு மட்டுமே—ஒரு கொலை பாதகனுக்கு மட்டுமே—பொருந்தக்கூடிய ஒரு வரைபடம் இந்த ஆட்களுடையதற்கு ஒத்திருப்பது இன்னும் மன அமைதியை கலங்கச் செய்வதாகவே இருக்கிறது”
(g86 11/22)