புதன், ஏப்ரல் 15
ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்ட வேண்டும்.—யோவா. 15:12.
ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வது என்றால் யெகோவாவுடைய மக்களுக்கு ரொம்பப் பிடிக்கும். (2 கொ. 8:4) ஆனால் சில சமயங்களில், இதைச் செய்வதற்குத் தைரியம் தேவைப்படுகிறது. உதாரணத்துக்கு, திடீரென்று ஒரு போர் வெடிக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தச் சமயத்தில் சகோதர சகோதரிகளுக்குச் சாப்பாடு, துணிமணி மற்றும் தங்குவதற்குப் பாதுகாப்பான இடம் தேவைப்படலாம். பைபிளும் மற்ற பிரசுரங்களும்கூட கையில் இல்லாமல் போய்விடலாம். சகோதர சகோதரிகளுக்கு உற்சாகமும், ஆதரவும்கூட தேவைப்படும். அப்போது, ஆடுகள்மேல் இருக்கிற அன்பால் மூப்பர்கள் உயிரையே பணயம் வைத்து உதவி செய்யக் களத்தில் இறங்குகிறார்கள். அந்த மாதிரி சந்தர்ப்பங்களில், நாம் ஒற்றுமையாக இருப்பது ரொம்ப முக்கியம். கிளை அலுவலகத்திலிருந்து வரக்கூடிய வழிநடத்துதலுக்கு ஒத்துழைப்பதும் ரொம்ப முக்கியம். (எபி. 13:17) ஒரு பேரழிவு வருவதற்கு முன்பு எப்படித் தயாராக இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் பேரழிவு வந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் அமைப்பு சொல்லியிருக்கிற அறிவுரைகளை மூப்பர்கள் அடிக்கடி மறுபார்வை செய்ய வேண்டும். (1 கொ. 14:33, 40) தைரியமாக இருங்கள்; அதேசமயத்தில் கவனமாகவும் இருங்கள். (நீதி. 22:3) செயல்படுவதற்கு முன்பு நன்றாக யோசியுங்கள். தேவையில்லாமல் ஆபத்தில் மாட்டிக்கொள்ளாதீர்கள். யெகோவாவை நம்புங்கள். பாதுகாப்பாக மற்றவர்களுக்கு உதவ அவர் கண்டிப்பாக உங்களுக்கு உதவுவார். w24.07 4 ¶8; 5 ¶11
வியாழன், ஏப்ரல் 16
‘இக்கட்டில் தவித்தபோது நான் யெகோவாவைக் கூப்பிட்டேன். என் கதறல் அவருடைய காதுகளை எட்டியது.’—சங். 18:6.
தாவீது ராஜா யெகோவாவைப் பற்றி நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார்; அவரை நம்பினார். சவுல் ராஜாவும் மற்றவர்களும் தன்னைக் கொலை செய்ய துரத்திக்கொண்டிருந்த சமயத்தில், தாவீது யெகோவாவிடம் உதவி கேட்டு ஜெபம் செய்தார். அந்த ஜெபங்களுக்கு யெகோவா பதில் கொடுத்து, தன்னைக் காப்பாற்றியதைப் பார்த்தபோது, “யெகோவாதான் உயிருள்ள கடவுள்!” என்று சொன்னார். (சங். 18:46) யெகோவா வெறுமனே உயிரோடிருக்கிற கடவுள் என்று தாவீது இங்கே சொன்னாரா? இல்லை! இதைப் பற்றி ஒரு ஆராய்ச்சி குறிப்பு இப்படி சொல்கிறது: யெகோவா “உயிருள்ள கடவுளாக இருந்து தன்னுடைய மக்கள் சார்பாக செயல்படுகிறார்” என்று உறுதியாக நம்பியதைத்தான் தாவீதின் வார்த்தைகள் காட்டுகின்றன. தன்னுடைய வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கிறது என்று யெகோவா நன்றாகத் தெரிந்துவைத்திருக்கிறார் என்றும், தனக்கு உதவ அவர் தயாராக இருக்கிறார் என்றும் தாவீது புரிந்துவைத்திருந்தார். அதனால், அவரைத் தொடர்ந்து வணங்க வேண்டும்... அவரைப் புகழ வேண்டும்... என்பதில் தாவீது உறுதியாக இருந்தார். (சங். 18:28, 29, 49) யெகோவா உயிருள்ள கடவுள் என்பதில் நாமும் உறுதியாக இருந்தால், அவருக்குச் சுறுசுறுப்பாக சேவை செய்வோம். கஷ்டங்களையும் சோதனைகளையும் சமாளிப்பதற்கு நமக்குப் பலம் கிடைக்கும். யெகோவாவுக்காகத் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும் என்ற ஆசை நமக்கு வரும். அவரோடு எப்போதும் நெருங்கி இருக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருப்போம். w24.06 20-21 ¶3-4
வெள்ளி, ஏப்ரல் 17
யாரும் எந்த விதத்திலும் உங்களை மோசம்போக்குவதற்கு அனுமதிக்காதீர்கள்.—2 தெ. 2:3.
பைபிளிலிருந்து நாம் கற்றுக்கொண்ட உண்மைகளோடு ஒத்துப்போகாத ஒரு விஷயத்தையோ அதிர்ச்சி தரும் ஒரு வதந்தியையோ கேள்விப்பட்டால் அதை உடனே நம்பிவிடக் கூடாது. நம்முடைய யோசிக்கும் திறனைப் பயன்படுத்த வேண்டும். முன்னாள் சோவியத் யூனியனில், அமைப்பிடம் இருந்து வந்ததாக சொல்லி எதிரிகள் ஒரு கடிதத்தை சகோதரர்களிடம் கொடுத்தார்கள். அந்தக் கடிதத்தில், ‘பிரிந்துபோய் நீங்களே தனியாக ஒரு அமைப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்’ என்று சொல்லியிருந்தது. அந்தக் கடிதம் பார்ப்பதற்கு உண்மையிலேயே அமைப்பிடமிருந்து வந்த மாதிரியே இருந்தது. ஆனால் உண்மையாக இருந்த சகோதரர்கள் அதைப் பார்த்து ஏமாந்துவிடவில்லை. ஏனென்றால், ஏற்கெனவே அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட விஷயங்களோடு அந்தக் கடிதம் ஒத்துப்போகவில்லை. இன்றைக்குக்கூட எதிரிகள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நம் மத்தியில் பிரிவினைகளை ஏற்படுத்தவும் நம்மைக் குழப்பவும் முயற்சி செய்யலாம். அந்த மாதிரி சமயங்களில் நாம் உடனே ‘நிதானத்தை இழந்துவிட’ கூடாது. அதற்குப் பதிலாக, நாம் ஏற்கெனவே தெரிந்து வைத்திருக்கிற உண்மைகளோடு அந்த விஷயம் ஒத்துப்போகிறதா என்று யோசிக்க வேண்டும். இப்படிச் செய்தால் நாம் ஏமாந்துவிட மாட்டோம்.—2 தெ. 2:2; 1 யோ. 4:1. w24.07 12 ¶14-15