ஊழியராய் முன்னேறுங்கள்
1 ஊழியர்களாகிய நாம் சத்தியத்தில் முன்னேற்றம் செய்கையில் நம்முடைய பரலோகத் தகப்பன் சந்தோஷப்படுகிறார். இதற்கு, நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் முதிர்ச்சி வாய்ந்த, திறம்பட்ட ஊழியர்களாய் முன்னேறுவது அவசியம். கண்காணியான தீமோத்தேயு ‘தேறுவது [அதாவது, முன்னேறுவது] யாவருக்கும் விளங்குவதற்கு’ அவர் வாசிக்கிற, கற்பிக்கிற விஷயங்களுக்கு எப்போதும் கவனம் செலுத்த வேண்டுமென பவுல் ஊக்கப்படுத்தினார். (1 தீ. 4:13-15) நாம் அனுபவம் வாய்ந்த பிரஸ்தாபிகளாக இருந்தாலும் நம்முடைய ஊழியத்தின் தரத்தை முன்னேற்றுவிக்க நாம் ஒவ்வொருவரும் கடினமாய் உழைக்க வேண்டும்.
2 தனிப்பட்ட இலக்குகளை வையுங்கள்: முன்னேற்றம் செய்வதற்குத் தனிப்பட்ட இலக்குகளை வைப்பது அவசியம். நாம் என்னென்ன இலக்குகளை வைக்கலாம்? பைபிள் எனும் ஆன்மீக பட்டயத்தைப் பயன்படுத்துவதில் இன்னும் திறம்பட்டவர்களாக ஆவதற்கு நாம் முயற்சி செய்யலாம். (எபே. 6:17) தெரு ஊழியம், தொலைபேசியில் சாட்சிகொடுத்தல், அல்லது வியாபார பிராந்தியத்தில் ஊழியம் செய்தல் போன்ற ஊழிய அம்சங்களிலும் நாம் முன்னேற்றம் செய்ய வேண்டியிருக்கலாம். இன்னும் திறம்பட்ட விதத்தில் மறுசந்திப்புகள் செய்வதற்கு நாம் உழைக்கலாம். மற்றொரு அருமையான இலக்கையும் வைக்கலாம்; அதாவது, பைபிள் படிப்புகளை ஆரம்பித்து, நடத்துவதில் நாம் இன்னும் திறம்பட்டவர்களாக ஆவதற்கு முயற்சி செய்யலாம்.
3 முன்னேற உதவும் ஏற்பாடுகள்: ஊழியர்களாக நாம் முன்னேறுவதற்கு சபை கூட்டங்கள் உதவுகின்றன; இதில் குறிப்பாக, தேவராஜ்ய ஊழியப் பள்ளியும் ஊழியக் கூட்டமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தக் கூட்டங்களுக்காகத் தயார் செய்வதற்கும் இவற்றில் கலந்துகொள்வதற்கும் அங்கே கற்றுக்கொண்ட விஷயங்களைப் பின்பற்றுவதற்கும் நாம் எந்தளவு முயற்சி செய்கிறோமோ அந்தளவு அதிக பயன் அடைவோம் என்பது உறுதி.—2 கொ. 9:6.
4 முன்னேற்றம் செய்வதில் நாம் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும். (நீதி. 27:17) நம்மோடு சேர்ந்து ஊழியம் செய்கிறவர்கள் மற்றவர்களை அணுகி எப்படிப் பேசுகிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனிப்பது அதற்கு உதவியாய் இருக்கும். புத்தகப் படிப்புக் கண்காணியும்கூட தனிப்பட்ட விதத்தில் நமக்கு உதவி அளிக்க ஏற்பாடு செய்யலாம். ஊழியத்தில் இன்னும் திறம்பட்டவர்களாகி, அதிக ஆனந்தத்தைப் பெறுவதற்கு அனுபவமிக்க பயனியரிடமிருந்தோ பிரஸ்தாபியிடமிருந்தோ நாம் உதவியைப் பெறுவது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! நம்முடைய புத்தகப் படிப்பு தொகுதியில் புதிய பிரஸ்தாபி யாராவது இருக்கிறாரா? நம்மோடு சேர்ந்து ஊழியம் செய்ய நாமே போய் அவரை ஏன் அழைக்கக் கூடாது?
5 இன்று செய்யப்படுகிற மிக முக்கியமான வேலை கிறிஸ்தவ ஊழியம் ஆகும். யெகோவாவுக்கு நாம் “ஸ்தோத்திரபலியை” செலுத்தும்போது நம்மிடமுள்ள மிகச் சிறந்ததை அவருக்கு கொடுக்க விரும்புகிறோம். (எபி. 13:15) நம்முடைய ஊழியத்தில் முன்னேறுவதற்கு முயற்சி செய்தால், “வெட்கப்படாத” ஊழியக்காரர்களாய், ‘சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவர்களாய்’ இருப்போம்.—2 தீ. 2:15.