பஞ்சாபியில் காவற்கோபுரம்
ஆகஸ்ட் 1, 1995 முதல் பஞ்சாபியில் காவற்கோபுர பத்திரிகையை சங்கம் பிரசுரிக்கிறது என்பதை அறிவிப்பதில் நாங்கள் சந்தோஷப்படுகிறோம்.
காவற்கோபுரம் பஞ்சாபி மொழியில், பெஹராபுரஜ் என்ற தலைப்பைக் கொண்டு மாதாந்தர பத்திரிகையாகப் பிரசுரிக்கப்படுகிறது. இந்தப் பத்திரிகைக்காக சபைகள் உடனடியாக விநியோகிப்போர் ஆணைகளை எழுதியனுப்பலாம், மேலும் இந்தப் பத்திரிகைக்கான சந்தாக்களையும் பிரஸ்தாபிகள் உடனே பெறத் துவங்கலாம். எல்லா மாதாந்தர பதிப்புகளுக்கும் உள்ளதுபோலவே, ஓராண்டு சந்தாவுக்கான நன்கொடை 35 ரூபாயாகும், ஆறுமாத சந்தா கிடையாது. தனிப் பிரதிகள் ஒவ்வொன்றும் 3.00 ரூபாயாகும்.
ஆகஸ்ட் 1 வெளியீடு, ஒருவிதத்தில் ஒரு முன்னோடி வெளியீடாகத் திகழ்வதால், அதிலுள்ள படிப்புக் கட்டுரைகள், சில மாதங்களுக்கு முன்பு ஆங்கில மற்றும் இந்திய மொழி காவற்கோபுர பதிப்புகளில் வெளிவந்தவையாக இருக்கின்றன, எனவே, அவை ஏற்கெனவே படித்துமுடித்த கட்டுரைகளாகும். செப்டம்பர் 1, 1995 முதல், பெஹராபுரஜ்-லுள்ள படிப்புக் கட்டுரைகள், பிற பதிப்புகளில் அட்டவணையிடப்பட்டுள்ள அதே கட்டுரைகளாக இருக்கும் (ஒவ்வொரு பெஹராபுரஜ்-லும் நான்கு அல்லது ஐந்து படிப்புக் கட்டுரைகள் இருக்கும்). ஆகையால், தங்கள் சபை காவற்கோபுர படிப்பில் பெஹராபுரஜ்-ஐ பயன்படுத்த விரும்பும் சபைகளும் தனிநபர்களும், அக்டோபர் 9, 1995-ல் துவங்கும் வாரத்திலிருந்து அவ்வாறு உபயோகிக்கலாம்.
இதற்கிடையே, பெஹராபுரஜ்-ற்கான விநியோகிப்போர் ஆர்டர்களை எழுதியனுப்புவதிலும் சந்தாக்களைப் பெறுவதிலும் உடன்பாடாக இருக்கும்படி நாங்கள் உற்சாகப்படுத்துகிறோம். யெகோவாவுடைய ராஜ்யத்தின் மூலம் விரைவில் நிறைவேறவிருக்கிற மனிதனுடைய இரட்சிப்பின் செய்தியைக் கொண்டுவருவதால், காவற்கோபுரம் உயிரளிக்கும் பத்திரிகையாகும். இந்தியாவில் காவற்கோபுரம் மொழிபெயர்க்கப்படும் பத்தாவது மொழியாக இது இருக்கிறது, இந்த மகத்தான ஏற்பாட்டுக்காக யெகோவாவுக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். வெளி ஊழியத்திலும் சகோதரர்களைக் கட்டியெழுப்புவதிலும், முதிர்ச்சியினிடமாக அவர்களை வளரச் செய்வதற்கு உதவுவதிலும் இது வல்லமைவாய்ந்த கருவியாக இருக்கும்படி நாங்கள் ஜெபிக்கிறோம். இதை முழுமையாகப் பயன்படுத்துவதில் நீங்கள் சந்தோஷமுள்ளவர்களாக இருப்பீர்கள் என்பதில் நிச்சயமாக இருக்கிறோம். அவ்வாறு செய்கையில், நிறைவான ஆசீர்வாதங்களையும் பலனாகப் பெறுவீர்களாக.