“ட்ரையரின் புனித அங்கி”
ஜெர்மனியில் உள்ள ட்ரையர், 2,000 ஆண்டுகள் நீண்ட வரலாற்றையுடைய மிகப் பழமையான நகரமாகும்.a பல நூற்றாண்டுகளாக ட்ரையர், கத்தோலிக்க சர்ச்சோடு உறுதியாக ஸ்தாபிக்கப்பட்ட தொடர்புகளைக் கொண்டதாக இருந்திருக்கிறது. 1996-ல் ஏறக்குறைய அந்த நகரத்தைப் போன்றே அத்தனை பழமையானதாக கருதப்படும் ஒரு நினைவுச்சின்னத்தைக் கத்தீட்ரல் காட்சிக்கு வைத்தது. அது ட்ரையரின் புனித அங்கி என்பதாக அழைக்கப்படுகிறது.
அங்கி 1.57 மீட்டர் நீளமும் 1.09 மீட்டர் அகலமும் பாதி அளவு கையுடையதாகவும் இருக்கிறது. அது பருத்தியால் நெய்யப்பட்டது, வால்ஃபார்ட்ஸ்ஃபுரர் ட்ரீரர் அன்ட் உம்கேபுங் (ட்ரையர் மற்றும் சுற்றுப்புறங்களுக்கு புனித யாத்திரை கையேடு) என்ற புத்தகத்தில் ஹான்ஸ் ஜோயாசிம் கான் என்பவரின்படி, அது ஒரு மேல் ஆடையாக ஒருவேளை உடுத்திக் கொள்ளப்பட்டிருக்கலாம். அசலான அந்த ஆடை—நூற்றாண்டுகளின்போது அது ஒட்டுப்போடப்பட்டு மற்ற துணிகளைக்கொண்டு பலப்படுத்தப்பட்டுள்ளது—பொ.ச. இரண்டாவது அல்லது முதல் நூற்றாண்டையும்கூட சேர்ந்தது என்பதாக சிலர் மதிப்பிடுகிறார்கள். அது சரியாக இருக்குமானால், அது அபூர்வமான ஒரு உடையாக, அருங்காட்சியகத்தில் வைப்பதற்குரிய ஒரு சுவாரசியமான பொருளாக இருக்கிறது.
என்றபோதிலும், அந்த ஆடை அபூர்வமானது மட்டுமல்லாமல் அது புனிதமானதும்கூட—அதன் காரணமாகவே புனித அங்கி என்ற பெயர் வழங்கப்படுகிறது என்பதாக சிலர் உறுதியாக சொல்கின்றனர். இது ஏனென்றால் இயேசு கிறிஸ்து அணிந்திருந்த உள் அங்கியைப் போல இது தையலில்லாமல் இருக்கிறது. (யோவான் 19:23, 24) சிலர் “பரிசுத்த அங்கி” உண்மையில் மேசியாவினுடையதாக இருந்தது என்பதாக உரிமைபாராட்டுகின்றனர்.
அந்த அங்கி ட்ரையருக்கு எவ்விதமாக வந்தது என்பது நிச்சயமாக தெரியவில்லை. “அது மகா கான்ஸ்டன்டைனின் தாய் பேரரசி ஹெலனா அந்த நகருக்கு அளித்த அன்பளிப்பு” என்பதாக ஒரு நோக்கீட்டுப் புத்தகம் குறிப்பிடுகிறது. தளர்ந்த அந்த அங்கி ட்ரையரில் இருப்பது பற்றிய முதல் நம்பகமான அறிக்கை 1196-லிருந்தே இருப்பதாக கான் குறிப்பிடுகிறார்.
கத்தீட்ரலில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் அந்த அங்கி 16-வது நூற்றாண்டு முதற்கொண்டு எப்பொழுதும் இல்லாம் அவ்வப்போது காட்சிக்கு வைக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக, ட்ரையருக்கு அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தின முப்பது ஆண்டுகள் போருக்குப்பின் உடனடியாக 1655-ல் இவ்வாறு செய்யப்பட்டது. புனித யாத்திரை நினைவுப்பொருட்களின் விற்பனையிலிருந்து அவ்வப்போது அதிகமான வருமானம் பெறப்பட்டிருக்கிறது.
இந்த நூற்றாண்டில் 1933, 1959 மற்றும் 1996 ஆகிய வருடங்களில் “புனித அங்கி” காண்பதற்கான யாத்திரைகள் மூன்று நடைபெற்றிருக்கின்றன. 1933-ல் புனித யாத்திரையானது ஹிட்லர் ஜெர்மன் குடியரசின் வேந்தராக நியமிக்கப்பட்ட அதே நாளில் அறிவிக்கப்பட்டது. தற்செயலாக இந்த இரண்டு சம்பவங்களும் ஒரே நாளில் நிகழ்ந்தது, புனித யாத்திரை சம்பந்தப்பட்ட சூழ்நிலைமைகளை தெளிவாக விளக்கிக் காண்பிக்கிறது என்பதாக கான் சுட்டிக்காட்டுகிறார். சீருடையிலிருந்த நாசி துருப்புகள் கத்தீட்ரலுக்கு வெளியே யாத்திரீகர்களுக்கு இராணுவ மரியாதை செலுத்தினர். இரண்டரைக் கோடி மக்கள் அந்த ஆண்டில் அங்கியைப் பார்வையிட்டனர்.
அநேக ஆண்டுகளாக ட்ரையர் வாசியாக இருக்கும் ஹெர்பர்ட் 1959 மற்றும் 1996 புனித யாத்திரைகளை ஒப்பீடு செய்தார். “1959-ல் தெருக்களில் ஒரே ஜனநெரிசல், ஒவ்வொரு தெரு முனையிலும் நினைவுப்பொருட்கள் விற்கப்படும் கடைகள் இருந்தன. இந்த வருடத்தில் பெரும் அமைதி.” ஆம், 1996-ல் 7,00,000 பேர் மாத்திரமே அங்கியைப் பார்வையிட்டனர்; இது 1959-னுடைய எண்ணிக்கையைவிட பத்து லட்சம் பேர் குறைவு.
அவர்கள் ஏன் அங்கியைப் பார்வையிடுகிறார்கள்?
அந்த அங்கி வழிபாட்டுக்குரிய ஒரு பொருளாக கருதப்படக்கூடாது என்பதை சர்ச் வலியுறுத்துகிறது. தையல் இல்லாத அங்கி சர்ச்சினுடைய ஒற்றுமைக்கு அடையாளமாக கருதப்படுகிறது. புனித யாத்திரையை அறிவிக்கும்போது பிஷப் ஸ்பிட்டல் பின்வருமாறு சொன்னதாக ஃபிராங்ஃப்ட்டர் அல்ஜிமீன் சூயிட்யுங் அறிவிக்கிறது: “நம்முடைய உலகின் அசாதாரணமான நிலைமை அசாதாரணமான பதில்களோடிருக்கும்படியாக கிறிஸ்தவர்களாகிய நம்மைத் தூண்டுகிறது. அதிகரித்துவரும் பகை, கொடுமை, வன்முறை ஆகியவற்றின் அலையை நாம் எதிர்த்து நிற்கவேண்டும்.” அந்த அங்கியைப் பார்வையிடுவது ஒற்றுமையை ஒருவருக்கு நினைப்பூட்டக்கூடும் என்பதாக பிஷப் விளக்கினார்.
ஆனால் சர்ச்சின் ஒற்றுமையைக் குறித்து நினைப்பூட்டப்படுவதற்கு ஏன் ஒருவருக்கு “புனித அங்கி” தேவை? அங்கி சேதமடைந்துவிட்டாலோ, சிதைந்துவிட்டாலோ அல்லது போலி என்பதாக அம்பலப்படுத்தப்பட்டுவிட்டாலோ அப்போது என்ன ஏற்படும்? அப்பொழுது சர்ச்சின் ஒற்றுமை ஆபத்திற்குள்ளாகிவிடுமா? ட்ரையருக்கு புனித யாத்திரை மேற்கொள்ள முடியாதவர்களைப் பற்றி என்ன? சர்ச்சிற்குள் காணப்படும் ஒற்றுமையை குறித்து அவர்கள் அதிக உணர்வில்லாமல் இருக்கின்றனரா?
கிறிஸ்தவ ஒற்றுமையைக் குறித்து தங்களுக்கு நினைப்பூட்டுவதற்கு பூர்வ கிறிஸ்தவர்களுக்கு பொருட்கள் எதுவும் தேவையாக இருந்ததாக பரிசுத்த வேதாகமம் எங்கும் குறிப்பிடுவதில்லை. ஆம், அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவர்களைப் பின்வரும் வார்த்தைகளைக் கொண்டு உற்சாகப்படுத்தினார்: “நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்.” (2 கொரிந்தியர் 5:7) ஆகவே உண்மைக் கிறிஸ்தவர்கள் அனுபவித்து மகிழும் ஒற்றுமை ‘விசுவாசத்தில் ஒருமைப்பாடு’ என்பதாக வருணிக்கப்படுகிறது.—எபேசியர் 4:11-13.
[அடிக்குறிப்புகள்]
a ஏப்ரல் 22, 1980, விழித்தெழு! (ஆங்கிலம்) பக்கங்கள் 21-3-ஐக் காண்க.