சந்தமனதின் பயன்கள்
அடங்கா கோபம் மனித உடலில் ஏற்படுத்தும் தீய பாதிப்பை நெடுநாட்களுக்கு முன்பே நவீன மருத்துவ அறிவியல் கண்டுபிடித்துள்ளது. நூறு வருடங்களுக்கு முன், தி ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோஷியேஷன் (JAMA) இவ்வாறு கூறியது: “கோபத்தின் உச்சநிலையில் ஒரு மனிதன் இறந்துபோய்விடுகிறான். ஒருவேளை அவனுடைய இருதயம் பலவீனமாக இருந்திருக்கலாம், அவனுடைய மன நிலை ஏற்படுத்திய அழுத்தத்தை அதனால் தாங்க முடியாமல் போயிருக்கும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு கோபத்தின் உச்சநிலையில் இறப்பது நெடுநாள் தொடர்ந்து ஏற்பட்ட இருதய பலவீனங்கள் ஒன்றுகூடி அடைந்த உச்சக்கட்டம் என்பதை யாரும் யோசிப்பதாகத் தோன்றவில்லை.”
கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை படிக்கும் மாணாக்கர்களுக்கு மேலே சொன்னவை ஆச்சரியம் அளிப்பதில்லை. உக்கிர கோபத்தின் தீய ஆபத்துக்களை JAMA சொல்வதற்கு சுமார் 29 நூற்றாண்டுகளுக்கு முன்பே, சாலொமோன் அரசன் இவ்வாறு எழுத ஏவப்பட்டார்: “சாந்தமனது உடலுக்கு ஜீவன்.” (நீதிமொழிகள் 14:30, தி.மொ.) இன்றும் இவ் வார்த்தைகள் உண்மையாய் நிலைத்திருக்கின்றன.
சாந்தமான மனநிலையைக் காப்பதன் மூலம், பெரும்பாலும் மன அழுத்தத்தோடு தொடர்புடைய உயர் இரத்த அழுத்தம், தலைவலி, மூச்சு இரைப்பு போன்ற பல வியாதிகளிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளலாம். இருப்பினும், நாம் ‘கோபத்தை விலக்கவும், உக்கிரத்தை விட்டுவிடவும்’ கடுமையாக முயற்சித்தால், நல்ல உடலாரோக்கியம் கிடைப்பதோடு, மற்றவர்களோடு நமக்குள்ள உறவும் முன்னேற்றமடையும். (சங்கீதம் 37:8, தி.மொ.) இயேசுவினிடத்தில் மக்கள் இயல்பாகவே ஈர்க்கப்பட்டதன் காரணம், அவரது சாந்த குணமும், அவர்களிடமாக அவர் வைத்திருந்த உள்ளப்பூர்வமான அக்கறையுமே ஆகும். (மாற்கு 6:31-34) அவ்வாறே, நாமும்கூட சாந்தமனதைப் பேணிக்காத்தால், மற்றவர்களுக்கு புத்துயிர் அளிக்கும் ஊற்றுமூலங்களாக நாம் இருப்போம்.—மத்தேயு 11:28-30.