என் கோபமா அல்லது என் உடல் ஆரோக்கியமா?
யார் கோபப்படுவதில்லை? நம் அனைவருக்கும் இது வருகிறது. சில சமயங்களில் ஓரளவான கோபம் நியாயமானதாக வாதாடப்படலாம். ஆனால், நேர்மையாகச் சொல்லப் போனால், பெரும்பாலும் நம்முடைய கோபம் (அல்லது அதன் கடுமை) நியாயமற்றதாக இருக்கிறது என்பது உண்மையல்லவா?
பைபிள் நமக்குச் சொல்கிறது: “கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு; பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்.” (சங்கீதம் 37:8) அப்படிப்பட்ட ஆலோசனை எவ்வளவு ஞானமாய் இருக்கிறது? உங்களுடைய நீண்ட கால உடல் ஆரோக்கியத்தை இது பாதிக்கக் கூடுமா?
தி நியூ யார்க் டைம்ஸ் அதன் “உடல் ஆரோக்கியம்” பகுதியில், இவ்வாறு குறிப்பிட்டது:
“அறியப்படும் ஒவ்வொரு ஏளனத்திற்கும் வெறுப்புடன்கூடிய சீற்றத்தினால் அடிக்கடி கத்தும் மக்கள், அல்லது கோபம் மற்றும் எரிச்சலடையும் மக்கள் தங்களைத் தாங்களே பூரிப்பற்றவர்களாக மாற்றுவதற்கும் மேலானதைச் செய்கிறார்கள். அவர்கள் தங்களையே கொல்கிறவர்களாக இருக்கக்கூடும்.
“நீடித்த கோபம் உடலிற்கு அவ்வளவு சீரழிவைக் கொண்டுவருவதால், சிகரெட் பிடித்தல், பருமனாதல், அதிக கொழுப்புச் சத்துள்ள உணவு சாப்பிடுதல் போன்றவற்றிற்குச் சமமாக அல்லது அவற்றைவிட அதிகமான அகால மரணத்தைக் கொண்டுவரும் பலமிக்க அம்சமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் பல பதிவுகளைச் சேகரித்திருக்கின்றனர்.
“‘வெறுப்புணர்ச்சி, சந்தேகத்தினால் வந்த கோபம் நாம் அறிந்த எந்த உடல்நலத் தீங்குக்கும் சமம் என்று எங்கள் ஆய்வுகள் காண்பிக்கின்றன,’ என டூக் பல்கலைக்கழக மருத்துவ மையத்திலுள்ள நடத்தை மருத்துவ (behavioral medicine) ஆராய்ச்சியாளர் டாக்டர் ரெட்ஃபர்ட் வில்லியம்ஸ் சொன்னார்.”
அன்றாட வாழ்க்கையின் பொதுவான பிரச்னைகளுக்கு அளவுக்கு மீறிய பிரதிபலிப்பைக் காண்பிப்பவர்கள் அதிகமான மன இறுக்க இயக்குநீர்களை (stress hormones) சுரக்கின்றனர். அவர்களின் வழக்கமான கோபங்கள், கொழுப்பினியின் (cholesterol) பாதுகாப்பூட்டும் மற்றும் தீங்குவிளைவிக்கும் வடிவங்களின் மத்தியில் சமமற்ற நிலையை உண்டாக்கி, அவர்களை இதய ரத்தவோட்ட நோயின் (cardiovascular disease) அபாயத்தில் வைக்கின்றன என்று ஆய்வுகள் காண்பிக்கின்றன.
‘என் சுபாவம் அப்படித்தான்’ அல்லது, ‘நான் வளர்ந்தது அப்படி,’ என்று சிலர் ஒருவேளை பிரதிபலிக்கலாம். என்னவாக இருந்தாலும், கடவுளுடைய புத்திமதியைப் பொருத்திப் பிரயோகிக்க உண்மையாக முயற்சிசெய்யும்போது, நீங்கள் மாற முடியாது என்பதை அது அர்த்தப்படுத்துவதில்லை. உங்களுடைய சொந்த பைபிளில், கோபம் மற்றும் சீற்றத்தைப் பற்றி நீதிமொழிகள் 14:29, 30; 22:24, 25; எபேசியர் 4:26; யாக்கோபு 1:19, 20 ஆகிய வசனங்களில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் அவருடைய புத்திமதியைச் சோதித்துப் பாருங்கள்.
அந்தத் தெய்வீக ஞானத்தைப் பொருத்திப் பிரயோகிப்பது உங்களுடைய உடல் ஆரோக்கியத்தை மேம்பட்டதாக்கும், உங்களுடைய வாழ்நாளை அதிகரிக்கும். டைம்ஸ் குறிப்பிட்டது: “தன்னையறியாமலும் வெறுப்பூட்டும்படியும் காண்பிக்கப்படும் பிரதிபலிப்புகளை மாற்றுவதன்மூலம் கோபப்படும் சூழ்நிலையில் இருப்பவர்கள் சீக்கிரத்தில் மரிக்கும் அபாயத்தைக் குறைக்க முடியும் என்று பல ஆராய்ச்சியாளர்கள் சொன்னார்கள்.”