தயவுள்ள அந்த ரோம நூற்றுக்கு அதிபதி
ரோம நூற்றுக்கு அதிபதிகள் தயவுக்கு பெயர் பெற்றவர்களாக இருக்கவில்லை. போரினால் உணர்ச்சியற்றுப்போன நூறு போர்ச் சேவகர்களின் ஒரு குழுவை முன்சென்று நடத்த நியமிக்கப்பட்டிருப்பதால், ஒரு நூற்றுக்கு அதிபதி இராணுவப் பயிற்சியளிக்கும் உறுதியான அதிகாரியாக, கண்டிப்பான ஒழுங்கினைக் கடைபிடிக்கச் செய்பவனாக, சில சமயங்களில் தூக்கிலிடுபவனாகவும்கூட இருக்க வேண்டும். என்றபோதிலும் பைபிள், அப்போஸ்தலனாகிய பவுலிடமாக உண்மையான தயாள குணத்தையும் இரக்கத்தையும் காண்பித்த அகுஸ்து பட்டாளத்தைச் சேர்ந்த ஒரு ரோம நூற்றுக்கு அதிபதியைப் பற்றி நமக்குச் சொல்கிறது. அவருடைய பெயர்? யூலியு.
பைபிள் இந்த மனிதனை நமக்கு அப்போஸ்தலர் 27-ம் அதிகாரத்தில் அறிமுகப்படுத்துகிறது. அப்போஸ்தலனாகிய பவுல் ரோமில் இராயனுக்கு அபயமிட்டிருந்தார். ஆகவே பவுலும் காவலில் வைக்கப்பட்டிருந்த மற்ற சிலரும் “யூலியு என்றும் பேர்கொண்ட நூற்றுக்கு அதிபதியினிடத்தில் ஒப்புவிக்கப்பட்டிருந்தார்கள்.” அவர்கள் ரோம பட்டாளத்துக்குத் தலைமைக் காரியாலயமாக சேவித்த எருசலேமுக்கு வடமேற்கிலிருந்த ஒரு துறைமுக நகரமாகிய செசரியாவிலிருந்து கடற்பயணத்தை துவங்கினார்கள். சரித்திராசிரியர் லூக்கா சொல்கிறார்: “மறுநாள் சீதோன் துறைபிடித்தோம். யூலியு பவுலைப் பட்சமாய் நடப்பித்து, அவன் தன் சிநேகிதரிடத்திலே போய்ப் பராமரிப்படையும்படிக்கு உத்தரவு கொடுத்தான்.”—அப்போஸ்தலர் 27:1–3.
யூலியு ஏன் இப்படிப்பட்ட தயவை காண்பிக்க உந்துவிக்கப்பட்டார் என்பது பைபிளில் கொடுக்கப்பட்டில்லை. அதிபதி பெஸ்து பவுலை விசேஷமாக நடத்தும்படியாக அவரிடம் உத்தரவிட்டிருக்கலாம். அல்லது பவுல் கைது செய்யப்பட்ட சூழ்நிலைகளை நன்கு அறிந்தவராக, யூலியு வெறுமென பவுலின் தைரியத்தையும் உத்தமத்தையும் பார்த்து வியந்திருக்கலாம். எப்படியிருந்தாலும், பவுல் ஒரு சாதாரண கைதி அல்ல என்பதை யூலியு மதித்துணர்ந்தார் என்பது தெரிகிறது.
என்றபோதிலும் யூலியு நல்ல துறைமுகத்திலிருந்து கடற்பயணம் புறப்படுவதற்கு எதிராக பவுல் கொடுத்த எச்சரிக்கைக்குச் செவிகொடாதிருப்பதை அவர் தெரிந்து கொண்டார். விரைவில் கப்பல் வட ஆப்பிரிக்க கரைக்கு அப்பால் ஆழங்குறைந்த அடிநிலத்தில் மணற்கரை மீது பாய்விரித்து செல்வதற்கு அதை அச்சுறுத்திய ஒரு கடுங்காற்றில் சிக்கிக்கொண்டது. (அப்போஸ்தலர் 27:8–17) இந்தக் கடுங்காற்றின் மத்தியில் பவுல் எழுந்து நின்று மிரண்டு போயிருந்த பயணிகளுக்குக் ‘கப்பற்சேதமேயல்லாமல் உங்களில் ஒருவனுக்கும் பிராணச் சேதம் வராது’ என்பதாக உறுதியளித்தார். இருந்தபோதிலும், ஒரு சில கப்பலாட்கள் பின்னர் கப்பலை விட்டோடிப் போக வகைதேடினார்கள். பவுல் அப்போது யூலியுவிடம் இவ்வாறு சொன்னார்: “இவர்கள் கப்பலில் இராவிட்டால் நீங்கள் தப்பிப் பிழைக்க மாட்டீர்கள்.”—அப்போஸ்தலர் 27:21, 22, 30, 31.
இந்த முறை யூலியு பவுலுக்குச் செவிசாய்ப்பதை தெரிந்து கொண்டார், கப்பலாட்கள் தப்பியோட எடுத்த முயற்சி முறிக்கப்பட்டது. பவுல் முன்னறிவித்த வண்ணமே, கப்பல் ஒரு திட்டில் மோதி அது கப்பற்சேதத்துக்குள்ளானது. கைதிகள் தப்பியோடக்கூடும் என்ற பயத்தில் கப்பலில் இருந்த போர்ச்சேவகர்கள் அவர்கள் அனைவரையும் கொன்றுவிட தீர்மானமாயிருந்தார்கள். ஆனால் மறுபடியுமாக, யூலியு தலையிட்டு தன் ஆட்களை தடுத்து, பவுலின் உயிரைக் காப்பாற்றினார்.—அப்போஸ்தலர் 27:32, 41-44.
தயவுள்ள இந்த நூற்றுக்கு அதிபதிக்கு என்ன நடந்தது அல்லது அவர் கிறிஸ்தவ விசுவாசத்தை எப்போதாவது ஏற்றுக்கொண்டாரா என்பது குறித்து பைபிள் நமக்குச் சொல்வதில்லை. அவர் காண்பித்த தயவு என்னவாயினும், அது கடவுள்–கொடுத்த மனச்சாட்சி வேலை செய்வதை வெளிப்படுத்துவதாக இருந்தது. (ரோமர் 2:14, 15) என்றபோதிலும் கிறிஸ்தவர்களோ வெறும் மனித தயவுக்கும் அப்பால் சென்று கடவுளுடைய ஆவியைக் கொண்டிருப்பதால் வரும் தெய்வீக தயவை காண்பிக்கிறார்கள். (கலாத்தியர் 5:22) நிச்சயமாகவே கடவுளை அறியாத ஒரு புறமத போர்ச்சேவகன் இப்படிப்பட்ட தயவை காண்பிக்கக்கூடுமானால், கடவுளுடைய மக்கள் எத்தனை அதிகமாக அவ்விதமாகச் செய்ய தூண்டப்பட வேண்டும்! (w91 11/15)