“பிள்ளைகள் பூப்போன்றோர்”
‘பிள்ளைகள் பூப்போன்றோர்; பிள்ளைகளின் நடைக்கு ஏற்ப நான் மெதுவாக நடந்து வருவேன்.’ —யாக்கோபு, பல பிள்ளைகளையுடைய தகப்பன், பொ.ச.மு. 18-ம் நூற்றாண்டு
பிள்ளைகளை தரக்குறைவாக நடத்துவதென்பது புதிய விஷயமல்ல. பழங்கால நாகரிகங்கள்—அஸ்டெக், கானானிய, இன்கா, ஃபொனீசிய நாகரிகங்கள்—பிள்ளைகளை நரபலி கொடுக்கும் பழக்கத்திற்கு பேர்போனவை. பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டு முதல் மூன்றாம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில், பாகால் தெய்வத்திற்கும் டானிட் பெண் தெய்வத்திற்கும் 20,000 பிள்ளைகள் பலி செலுத்தப்பட்டதாக கார்த்தேஜ் என்ற ஃபொனீசிய நகரத்தில் (தற்பொழுது வட ஆப்பிரிக்காவின் டுனிஸின் புறநகர்ப்பகுதி) மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சி காட்டுகிறது! இந்த எண்ணிக்கை அதிக அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காரணம் என்னவென்றால், கார்த்தேஜ் நகரம் வளர்ச்சியின் சிகரத்தில் இருக்கையில் அதன் மக்கள் தொகை சுமார் 2,50,000 மட்டுமே.
இருப்பினும், இவர்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு பழங்கால சமுதாயம் இருந்தது. அதுவே இஸ்ரவேல் தேசம். பிள்ளைகளை கொடூரமாக நடத்தும் மக்களால் சூழ்ந்திருந்தபோதிலும், பிள்ளைகளை கண்ணியமாக நடத்தும்விதத்தில் அது தனித்து விளங்கியது. அந்த தேசத்திற்கும் குடும்பத்திற்கும் தகப்பனான யாக்கோபு இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. பைபிள் புத்தகமாகிய ஆதியாகமத்தின்படி, தன்னுடைய சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்லும்போது, பிள்ளைகளை வருத்தாமல் நடத்திச் செல்ல வேண்டும் என்பதற்காக பிள்ளைகளுடைய நடைக்கேற்ப யாக்கோபு தன்னுடைய நடையின் வேகத்தைக் குறைத்துக்கொண்டார். “பிள்ளைகள் மென்மையானவர்கள்” என்று அவர் சொன்னார். அந்த சமயத்தில் அவருடைய பிள்ளைகள் 5 முதல் 14 வயது நிரம்பியவர்களாக இருந்தனர். (ஆதியாகமம் 33:13, 14, NW) அவருடைய பிள்ளைகளும், அதாவது இஸ்ரவேலர்களும், பிள்ளைகளுடைய தேவைகளுக்கும் மதிப்புக்கும் மரியாதை காண்பித்தனர்.
நிச்சயமாகவே, பைபிள் காலங்களில் பிள்ளைகள் நிறைய வேலைகள் செய்யவேண்டி இருந்தது. பையன்கள் வளர வளர விவசாயம் அல்லது தச்சுவேலை போன்ற கைத்தொழிலில் தங்களுடைய தந்தையால் பயிற்சி அளிக்கப்பட்டனர். (ஆதியாகமம் 37:2; 1 சாமுவேல் 16:11) பெண் பிள்ளைகள் வீட்டில் இருக்கும்போது பிற்கால வாழ்க்கையில் பயன் தரும் வீட்டுவேலைகளை அவர்களுடைய தாய் சொல்லிக் கொடுத்தார். யாக்கோபின் மனைவி, ராகேல், சிறுவயதில் ஆடு மேய்ப்பவளாக இருந்தாள். (ஆதியாகமம் 29:6-9) இளம்பெண்கள், திராட்சைத் தோட்டங்களிலும் வயல்களிலும் அறுவடையின்போது வேலை செய்தனர். (ரூத் 2:5-9; உன்னதப்பாட்டு 1:6) a இப்படிப்பட்ட வேலைகள் எல்லாமே பொதுவாக பெற்றோரின் அன்பான மேற்பார்வையின்கீழும் கல்வி புகட்டும் விதத்திலும் செய்யப்பட்டன.
அதே சமயம், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுகளின் ஆனந்தத்தையும் இஸ்ரவேலின் இளம்பிள்ளைகள் ருசிகண்டனர். ‘விளையாடுகிற ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் நிறைந்த நகரத்தின் தெருக்களைப்’ பற்றி தீர்க்கதரிசி சகரியா பேசினார். (சகரியா 8:5) சந்தைவெளிகளில் உட்கார்ந்து புல்லாங்குழல் ஊதிக்கொண்டும் ஆடிக்கொண்டும் இருந்த சிறு பிள்ளைகளைப் பற்றி இயேசுவும் குறிப்பிட்டார். (மத்தேயு 11:16, 17) இப்படி மரியாதையோடு பிள்ளைகளை நடத்த தூண்டுகோலாய் இருந்தது எது?
மேன்மையான நியமங்கள்
இஸ்ரவேலர்கள், கடவுளுடைய சட்டங்களை சரிவர பின்பற்றிக் கொண்டிருந்த வரையில், அவர்களுடைய பிள்ளைகளை ஒருபோதும் ஒடுக்கவோ அல்லது துர்ப்பிரயோகிக்கவோ இல்லை. (எரேமியா 7:31-உடன் உபாகமம் 18:10-ஐ ஒப்பிடுக.) அவர்கள் தங்களுடைய மகன்களையும் மகள்களையும் ‘யெகோவாவிடமிருந்து பெற்ற சொத்தாகவும்,’ ‘பரிசாகவும்’ கருதினர். (சங்கீதம் 127:3-5, NW) பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளை ‘தங்கள் பந்தியைச் சுற்றி இருக்கும் ஒலிவ மரங்களாக’ மதித்தனர். விவசாயத்தையே நம்பி இருந்த அந்த சமுதாயத்திற்கு ஒலிவ மரங்கள் எவ்வளவு மதிப்புமிக்கவை! (சங்கீதம் 128:3-6) மகனையும் மகளையும் குறிக்கும் வார்த்தைகள் தவிர பூர்வ எபிரெய மொழியில், பிள்ளைகளின் வளரும் பிராயத்தின் நிலை ஒவ்வொன்றையும் குறிக்கும் வித்தியாசமான ஒன்பது வார்த்தைகள் இருந்தனவென சரித்திர ஆசிரியர் ஆல்ஃப்ரட் எடர்ஷீம் குறிப்பிடுகிறார். “பிள்ளைகளின் வளரும் பிராயம் ஒவ்வொன்றையும் தெள்ளத்தெளிவாக சுட்டிக்காட்டும் பெயர் ஒன்றை கொடுப்பதற்காக அவர்களுடைய வளர்ச்சியை கூர்ந்து கவனித்த நபர்கள் தங்களுடைய பிள்ளைகளோடு பாசக்கயிற்றால் கட்டிப் போடப்பட்டவர்களாக இருந்திருப்பார்கள் என்பது உறுதி” எனக் கூறி அவர் முடிக்கிறார்.
கிறிஸ்தவ சகாப்தத்தில், பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளை மதிப்போடும் மரியாதையோடும் நடத்தும்படி அறிவுரை அளிக்கப்பட்டனர். மற்றவர்களுடைய பிள்ளைகளை எப்படி நடத்துவது என்பதற்கு இயேசு மிகச் சிறந்த முன்மாதிரி வைத்தார். இயேசுவின் பூமிக்குரிய ஊழியம் முடியும் தறுவாயில், ஒரு சந்தர்ப்பத்தில் மக்கள் தங்களுடைய பிள்ளைகளை இயேசுவிடம் அழைத்து வந்தனர். பிள்ளைகளுக்காக நேரம் ஒதுக்குவதற்கு இயேசுவால் முடியாது என்று நினைத்து, அவருடைய சீஷர்கள் மக்களை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால், இயேசு தம்முடைய சீஷர்களை கண்டித்து, சொன்னார்: “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடை பண்ணாதிருங்கள்.” அதுமட்டுமல்ல, இயேசு “அவர்களை அணைத்துக்கொண்டார்.” இயேசு, பிள்ளைகளை மதிப்புவாய்ந்தவர்களாகவும் பரிவோடு நடத்தப்பட வேண்டியவர்களாகவும் கருதினாரா என்ற கேள்விக்கே இடமில்லை.—மாற்கு 10:14, 16; லூக்கா 18:15-17.
பின்னர், அப்போஸ்தலனாகிய பவுல் “உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்கு கோபமூட்டாதிருங்கள்” என தகப்பன்மார்களுக்கு சொன்னார். (கொலோசெயர் 3:21) இந்தக் கட்டளைக்கு இசைவாக, கிறிஸ்தவப் பெற்றோர்கள் அப்போதும்சரி இப்போதும்சரி தங்களுடைய பிள்ளைகளை மோசமான சூழ்நிலைகளில் வேலை செய்ய ஒருபோதும் அனுமதிப்பதில்லை. உடல், உணர்ச்சி, ஆன்மீக ரீதியில் பிள்ளைகள் செழித்தோங்க, அன்பான, பரிவான, பாதுகாப்பான சூழ்நிலை அவசியம் என்பதை பெற்றோர்கள் அறிந்திருக்கின்றனர். பெற்றோர்கள் தங்களுடைய உண்மையான அன்பை பிள்ளைகளிடம் வெளிப்படையாக காண்பிக்க வேண்டும். பிள்ளைகளுடைய ஆரோக்கியத்தைப் பாழாக்கும் சூழ்நிலையில் வேலை செய்வதில் இருந்து அவர்களைக் காப்பதையும் இது உள்ளடக்கும்.
உண்மை நிலை—நவீன காலம்
நாம் ‘கொடிய காலங்களில்’ வாழ்கிறோம் என்பது சரியே. (2 தீமோத்தேயு 3:1-5) பொருளாதாரக் கஷ்டங்கள் காரணமாக, பல நாடுகளில் கிறிஸ்தவ குடும்பங்களும்கூட தங்களுடைய பிள்ளைகளை வேலைக்கு அனுப்பாமல் இருக்க முடியவில்லை. ஏற்கெனவே குறிப்பிட்டபடி, கல்வி புகட்டும் விதத்திலும் மனநிறைவளிக்கும் விதத்திலும் இருக்கும் வேலைகளை செய்வதில் தவறு ஏதுமில்லை. இப்படிப்பட்ட வேலை, பிள்ளைக்கு தேவையான படிப்பு, சமநிலையான பொழுதுபோக்கு, போதியளவு ஓய்வு ஆகியவற்றிற்கு குந்தகம் விளைவிக்காமல், பிள்ளையினுடைய உடல், மன, ஆன்மீக, ஒழுக்க அல்லது சமூக வளர்ச்சியை முன்னேற்றுவிக்கும் அல்லது தூண்டுவிக்கும்.
கொடூரமான, உணர்ச்சியே இல்லாத ஜடம்போன்ற, அல்லது பழிபாவங்களுக்கு அஞ்சாத முதலாளிகளிடத்தில் அடிமைகளாக வேலை செய்ய அல்ல, ஆனால் தங்களுடைய அன்பான மேற்பார்வையின்கீழ் பிள்ளைகள் வேலை செய்வதையே கிறிஸ்தவ பெற்றோர்கள் விரும்புவர் என்பதில் துளிகூட சந்தேகமில்லை. உடல், பாலுறவு அல்லது உணர்ச்சிரீதியான துர்ப்பிரயோகத்திற்கு ஆளாகும் வேலைகளில் தங்கள் பிள்ளைகள் ஈடுபடுத்தப்படாமல் இருப்பதை இப்படிப்பட்ட பெற்றோர் நிச்சயப்படுத்திக் கொள்கின்றனர். மேலும், தங்கள் பிள்ளைகள் தங்கள் அருகில் இருக்க வேண்டுமென்றே அவர்கள் விரும்புகின்றனர். இந்த வகையில், பைபிள் அடிப்படையிலான ஆன்மீக கல்வி புகட்டும் ஆசான்களாக தங்களுடைய பாகத்தை பெற்றோர் நிறைவேற்ற முடியும். “நீ அவைகளை [கடவுளுடைய வார்த்தைகளை] உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசு.”—உபாகமம் 6:6, 7.
அதுமட்டுமல்ல, பிறரிடம் இரக்கத்தோடும் சிநேகப்பான்மையோடும் மனஉருக்கத்தோடும் செயல்படும்படி ஒவ்வொரு கிறிஸ்தவரும் அறிவுறுத்தப்படுகிறார். (1 பேதுரு 3:8) ‘யாவருக்கும் நன்மை செய்யும்படி’ உற்சாகப்படுத்தப்படுகிறார். (கலாத்தியர் 6:10) பொதுவாக மக்கள் ஒருவருக்கொருவரே இப்படிப்பட்ட தெய்வீக குணங்களை காண்பிக்க வேண்டுமென்றால், தங்களுடைய பிள்ளைகளிடம் எந்தளவுக்கு காண்பிக்க வேண்டும்! “மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” என்ற பொன் விதிக்கு இசைவாக, உடன் கிறிஸ்தவர்களாக இருந்தாலும்சரி அல்லது இல்லாவிட்டாலும்சரி, கிறிஸ்தவர்கள் மற்றவர்களுடைய பிள்ளைகளை ஒருபோதும் ஒடுக்கமாட்டார்கள். (மத்தேயு 7:12) மேலும், கிறிஸ்தவர்கள் சட்டதிட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள். அதனால், அவர்கள் தங்களிடம் வேலை செய்யும் ஆட்களுடைய வயது வரம்புக்கான அரசாங்க சட்டங்களை மீறாமல் இருக்கவே விரும்புகின்றனர்.—ரோமர் 13:1.
சரியான தீர்வு
எதிர்காலத்தைப் பற்றியதென்ன? பெரியவர்களுக்கும்சரி பிள்ளைகளுக்கும்சரி நம்பிக்கை அளிக்கும் எதிர்காலம் காத்திருக்கிறது. “பரலோக ராஜ்யம்” என்று பைபிள் அழைக்கும், வரப்போகிற உலக அரசாங்கமே குழந்தைத் தொழில் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என்பதில் உண்மைக் கிறிஸ்தவர்கள் நம்பிக்கையோடு இருக்கின்றனர். (மத்தேயு 3:2) “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்று சொல்லி, பல நூற்றாண்டுகளாக கடவுள் பயமுள்ள மக்கள் ஜெபித்து வருகின்றனர்.—மத்தேயு 6:9, 10.
குழந்தைத் தொழிலை ஊக்குவிக்கும் நிலைமைகளை இந்த அரசாங்கம் நீக்கும். இந்த அரசாங்கம் கொண்டு வரும் பல நன்மைகளில் இதுவும் ஒன்று. வறுமையை அறவே ஒழித்துவிடும். “பூமி தன் பலனைத் தரும், தேவனாகிய எங்கள் தேவனே எங்களை ஆசீர்வதிப்பார்.” (சங்கீதம் 67:6) தெய்வீக குணங்களை அடிப்படையாகக் கொண்ட சரியான கல்வியை கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ் அனைவரும் பெறுவர் என்பது உறுதி. “[கடவுளுடைய] நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.”—ஏசாயா 26:9.
ஏற்றத்தாழ்வுகளை வளர்க்கும் பொருளாதார அமைப்புகளை கடவுளுடைய அரசாங்கம் ஒழித்துவிடும். இன, சமுதாய, வயது, அல்லது ஆண், பெண் போன்ற வேறுபாடுகள் அனைத்தும் இல்லாமல் போய்விடும். ஏனென்றால், “உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக” என்பது உட்பட, அன்பின் சட்டமே அந்த அரசாங்கத்தின் மேலோங்கி நிற்கும் சட்டம். (மத்தேயு 22:39) அந்த நீதியான அரசாங்கத்தின்கீழ், குழந்தைத் தொழில் பிரச்சினை முழுவதுமாக நீக்கப்படும்.
[பக்கம் 12-ன் பெட்டி]
விபசார விடுதியின் தலைவி கொடுத்த விடுதலை
15 வருடங்களாக, செஸிலியாb என்பவர் கரீபியன் தீவுகள் ஒன்றில் விபசாரவிடுதிகளை சொந்தமாக நடத்திவந்தார். ஒரே சமயத்தில், 12 முதல் 15 பெண்பிள்ளைகளை வாங்கினார். அவர்களில் பெரும்பாலானோர் 18 வயதிற்கும் குறைவானவர்கள். அந்தப் பெண்களின் குடும்பங்கள் பட்ட கடனுக்காக அவர்களுடைய விருப்பத்திற்கு எதிராக அந்த விடுதிக்கு விற்கப்பட்டனர். அந்தப் பெண்கள் பட்ட கடன்களை எல்லாம் செஸிலியா கொடுத்து தீர்த்தார். ஆனால், அவர்களையோ தனக்காக வேலை செய்ய வைத்துக்கொண்டார். அவர்கள் சம்பாதித்த பணத்தில் இருந்து, அவர்களுடைய சாப்பாடு, துணிமணி போன்ற செலவுகளுக்கும் அதில் ஒரு பகுதியை அவர்களுடைய கடனை அடைக்கவும் வைத்துக்கொண்டார். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக கடனை அடைத்து அந்தப் பெண்கள் விடுதலை பெற வேண்டும் என்றால் அது பல ஆண்டுகள் ஆகும். காவலுக்கு ஓர் ஆள் இல்லாமல் தனியாக ஒருபோதும் அந்தப் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
ஒரு நிகழ்ச்சி, செஸிலியாவின் நினைவிலிருந்து நீங்காமல் இருக்கிறது. விடுதியில் இருந்த ஒரு விலைமகளின் தாய், தன்னுடைய மகள் “வேலை செய்து” சம்பாதித்த சாப்பாட்டை வாங்கிச் செல்ல ஒவ்வொரு வாரமும் வருவாள். அந்தப் பெண்ணுக்கு ஒரு மகன் இருந்தான். கடன்களை எல்லாம் அடைத்து, விடுதலைப் பெறும் நம்பிக்கையே அவளுக்கு இல்லாமல் போயிற்று. எனவே, தன் மகனைக் காப்பாற்றும் பொறுப்பை விடுதியின் தலைவியிடம் ஒப்படைப்பதாக ஒரு குறிப்பு எழுதி வைத்துவிட்டு, ஒரு நாள் அவள் தற்கொலை செய்துகொண்டாள். தன்னுடைய நான்கு பிள்ளைகளோடு சேர்த்து அவளுடைய மகனையும் செஸிலியாவே வளர்த்தார்.
செஸிலியாவின் மகள்களில் ஒருத்தி, யெகோவாவின் சாட்சிகளுடைய மிஷனரிகளோடு பைபிளை படிக்க துவங்கினாள். செஸிலியாவும் அதில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டார். ஆனால், அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்ற காரணத்தால், துவக்கத்தில் அவர் மறுத்துவிட்டார். ஆனால், பைபிள் கலந்தாலோசிப்பை கேட்க, கேட்க படிப்படியாக கடவுளுடைய அன்பையும் பொறுமையையும் புரிந்து கொண்டார். கடவுளுடைய மன்னிக்கும் குணத்தையும் மனதார போற்றினார். (ஏசாயா 43:25) பைபிளைத் தானே படிக்க வேண்டும் என்ற ஆசையில், எழுதப் படிக்க கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். பைபிள் அறிவு வளர வளர, கடவுளுடைய உயர்ந்த ஒழுக்க தராதரங்களுக்கு இசைவாக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியத்தை அவர் உணர்ந்தார்.
ஒரு நாள், விடுதிப் பெண்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் விதத்தில், அவர்கள் எல்லாரும் சுதந்திரமாக எங்கு செல்ல விரும்புகிறார்களோ அங்கே போகலாம் என்று விடுதலை அளித்தார்! அவர்கள் செய்துகொண்டிருந்த செயல், யெகோவாவுக்கு அருவருப்பானது என்பதையும் விளக்கினார். அவருக்கு கொடுக்க வேண்டிய கடனை யாருமே திருப்பித் தரவில்லை. இருப்பினும், அவர்களில் இருவர் இவருடனேயே தங்கி விட்டனர். மற்றொரு பெண் முழுக்காட்டப்பட்ட சாட்சியானாள். அதுமுதல் இதுவரை சுமார் 11 வருடங்களாக, செஸிலியா கடவுளுடைய ஊழியத்தை முழு நேரமாக செய்து வருகிறார். கடவுள் வெறுக்கும் பழக்கவழக்கங்களை அறவே ஒதுக்கித் தள்ள மற்றவர்களுக்கும் உதவி வருகிறார்.
[அடிக்குறிப்புகள்]
a வயல் அல்லது வீட்டு வேலைகளுக்கு மட்டுமே பெண்கள் பொருத்தமானவர்கள் என அவர்களை குடும்பத்தில் இரண்டாந்தரமான அங்கத்தினர்களாக இது இழிவுபடுத்துவதில்லை. வீட்டு வேலைகள் மட்டுமல்ல, நிலங்களை வாங்குதல் விற்றல், விளைச்சல் நிலங்களை பராமரித்தல், சிறு வியாபாரம் நடத்துதல் போன்றவற்றையும் திருமணமான பெண்கள் நிர்வகிக்க முடியும் என்பதை நீதிமொழிகளில் சொல்லப்பட்டுள்ள ‘திறமைசாலியான மனைவியைப்’ பற்றிய வருணனை காட்டுகிறது.—நீதிமொழிகள் 31:10, 16, 18, 24, NW.
[அடிக்குறிப்பு]
b அவருடைய உண்மைப் பெயரல்ல.