‘எனக்கு ஏழு வயசு’
ஹலோ. எம் பேரு ஆமேல்யா. கரீபியன் தீவுல இருக்கேன். எனக்கு ஏழு வயசு ஆவுது. கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் என்னோட அப்பாம்மா என்னை இந்த ஊர்ல இருக்குற பணக்கார வீட்டுல கொண்டு வந்து விட்டாங்க.
எப்பவும் போல இன்னைக்கும் காலங்காத்தால அஞ்சு மணிக்கு எழுந்தேன். பக்கத்தில் இருக்குற கிணத்துக்கு போய் தண்ணி கொண்டு வந்தேன். பெரி. . .ய குடத்தை என் தலை மேல வச்சு தூக்கமுடியாம தூக்கிட்டு வந்தேன். இல்லன்னா, ஒரே அடியும் உதையும்தான் விழும். அப்புறம், டிஃபன் செஞ்சி, எல்லாருக்கும் பரிமாறினேன். டிஃபன் செய்ய கொஞ்சம் லேட்டாயிட்டதால அந்த ஐயா என்னை பெல்ட்டால அடிச்சார்.
அதுக்கப்புறம், அவங்களோட அஞ்சு வயசு பையனை ஸ்கூலுக்கு அழைச்சிட்டு போனேன். வந்து, மத்தியான சாப்பாடு செய்யறதுக்கும் பரிமாறதுக்கும் கூடமாட உதவினேன். இதுக்கு நடுவுல, காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு ஒரு நடை போனேன். அடுப்புல விறகை எரியவிடறது, முற்றத்தை பெருக்கறது, துணிய துவைச்சு பாத்திரங்களை தேய்ச்சு அடுப்படியை சுத்தம்பண்றது, இது போதாதுன்னு சின்ன சின்ன எடுபிடி வேலை வேற செய்யணும். அந்தம்மாவுக்கு காலை அமுக்கிவிட்டேன். இன்னைக்கு என்னவோ அவங்களுக்கு மூட் சரியில்ல. அதனால கோபத்தில பளார்னு என்னை அறைஞ்சுட்டாங்க. நாளைக்காவது நல்ல மூட்ல இருக்கணும்.
இத்தனையும் செஞ்சப்புறம், என்ன மிச்சம் மீதி இருக்குதோ அதுதான் எனக்கு சாப்பாடு. நேத்து நான் குடிச்ச சோளக்கஞ்சிக்கு இது எவ்ளோ தேவலை. என்னோட டிரஸ் எல்லாமே கந்தலாத்தான் இருக்கு. போட்டுக்க செருப்புகூட இல்ல. அவங்களுக்காக நான் தண்ணி கொண்டு வர்றேன். ஆனா நான் அதுல குளிக்கக்கூடாது. நேத்து ராத்திரி வீட்டுக்கு வெளிலதான் தூங்கினேன். எப்பவாவது, வீட்டுக்குள்ள தரைல படுக்க சான்ஸ் கிடைக்கும். இந்த லெட்டரைக்கூட நான் எழுதல. ஏன்னா நான் ஸ்கூலுக்கே போகலையே.
ஆமேல்யா.
ஆமேல்யா என்பது அவளுடைய உண்மையான பெயரல்ல.a ஆனால், அவளுடைய நிர்க்கதியான நிலை உண்மையானதே. பெரும்பாலும் மோசமான சூழ்நிலைகளில் வேலைபார்த்து பிழைக்கும் கோடிக்கணக்கான பிள்ளைகளில் ஆமேல்யாவும் ஒருத்தி. நம்முடைய நாளின் மிகப்பெரிய பிரச்சினை, குழந்தைப் பாட்டாளிகள். எளிய பரிகாரம் ஏதுமில்லா மிகச் சிக்கலான பிரச்சினை இது. பூதாகரமானது, சமுதாயத்தை அரித்து தின்னக்கூடியது, விளைவுகளோ நாசகரமானது. பிள்ளைகளை இரக்கமின்றி சித்திரவதை செய்தும் மனிதகுலத்தின் மதிப்பையே அது அவமதித்தும் வருகிறது.
குழந்தைத் தொழில் எந்தளவு விரிவாக பரவியிருக்கிறது? இந்தப் பிரச்சினையின் ஆணிவேர் எது? எந்த ரூபத்தில் வருகிறது? மனித குடும்பத்தின் மிக மென்மையான, எளிதில் தாக்கப்படும் வகுப்பாகிய பிள்ளைகள் இனியும் வறுமைக்கும் சுரண்டுதலுக்கும் ஆளாகாத ஒரு காலம் எப்போதாவது வருமா?
[அடிக்குறிப்புகள்]
a இச்சிறுமியின் சோகக்கதை, உலக பிள்ளைகளின் நிலை 1997-ல் (ஆங்கிலம்) அறிக்கையிடப்பட்டது.