குடும்ப அட்டவணை—தினவசனம்
1 அன்பான பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குச் சத்தான உணவைக் கொடுக்க தினந்தினம் பெரும்பாடு படுகிறார்கள். கடவுளுடைய வார்த்தையிலிருந்து அவர்களுக்கு ஆன்மீக ரீதியில் சத்தான உணவை அளிப்பது அதைவிடவும் அதிக முக்கியம். (மத். 4:4) ஆன்மீக பசியை அதிகரிப்பதற்கும், ‘இரட்சிப்புக்கென்று வளருவதற்கும்,’ உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் உதவுவதற்கான ஒரு வழி, ஒவ்வொரு நாளும் குடும்பமாக தினவசனத்தையும் குறிப்பையும் கலந்தாலோசிப்பதற்கு நேரம் ஒதுக்குவதாகும். (1 பே. 2:3, திருத்திய மொழிபெயர்ப்பு) இதற்கு உங்கள் குடும்ப அட்டவணையில் எப்போது நேரத்தை ஒதுக்கலாம்?
2 உணவு வேளைகளில்: தினவசனத்தைக் கலந்தாலோசித்து ஒரு நாளைத் தொடங்குவது, அந்த நாள் முழுவதும் யெகோவாவை மனதில் நினைக்க உங்கள் குடும்பத்தாருக்கு உதவும். (சங். 16:8) ஒரு தாய் தன் மகன் காலையில் உணவு சாப்பிடும்போது தினவசனத்தையும் அதன் குறிப்பையும் வாசித்துக் கலந்தாலோசித்தார், அவன் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பு சேர்ந்து ஜெபம் செய்தார். இது அவனுக்குப் பலத்தைக் கொடுத்தது; பள்ளியில், நாட்டுப்பற்று சம்பந்தப்பட்ட பிரச்சினை எழுந்தபோது அதற்கு இணங்கிவிடாதிருக்கவும், ஒழுக்கக் கேடான காரியங்களில் ஈடுபடுவதற்கான சோதனைகளை எதிர்க்கவும், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தைரியமாகச் சாட்சி கொடுக்கவும் அவனுக்குப் பலத்தை அளித்தது. அந்தப் பள்ளியில் அவன் மட்டுமே ஒரு யெகோவாவின் சாட்சியாக இருந்தபோதிலும் தனிமையில் இருப்பதாக அவன் நினைக்கவே இல்லை.
3 காலை வேளையில் தினவசனத்தைக் கலந்தாலோசிப்பது சிரமமாக இருக்குமென்றால் குடும்பமாக அதை பிறகு படிக்கலாம், ஒருவேளை இரவு சாப்பாட்டு வேளையில் படிக்கலாம். இந்தச் சமயத்தில், வெளி ஊழிய அனுபவங்களையும் தனிப்பட்ட பைபிள் படிப்பில் ரசித்துப் படித்த பகுதிகளையும்கூட சிலர் கலந்தாலோசிக்கிறார்கள். இப்படி இரவு உணவு வேளைகளில் குடும்பமாகத் தாங்கள் செலவிட்ட மறக்க முடியாத சமயங்களைப் பற்றி இன்னமும் எண்ணிப் பார்த்து அநேகர் சந்தோஷப்படுகிறார்கள்.
4 இரவில்: சில குடும்பங்களுக்குத் தினவசனத்தைக் கலந்தாலோசிப்பதற்கான சிறந்த நேரம் படுக்கைக்குப் போவதற்கு முன்னான நேரம்தான். இதுவும்கூட ஒன்றாகச் சேர்ந்து ஜெபம் செய்வதற்கு ஏற்ற வேளையாக இருக்கலாம். நீங்கள் யெகோவாவைப் பற்றி பேசுவதையும் அவரிடம் ஜெபிப்பதையும் பிள்ளைகள் தினமும் கேட்கும்போது அவர்களுக்கு அவர் நிஜமான நபராக ஆகிறார்.
5 தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல் சிறுபுத்தகத்தை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்தி உங்கள் பிள்ளைகளின் மனதில் சத்தியத்தைப் பதிய வைக்க எடுக்கும் முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிப்பாராக.