மழை காலத்தில் ‘வார்த்தையைப் பிரசங்கியுங்கள்’
1 “சாதகமான காலத்திலும் கஷ்டமான காலத்திலும் வார்த்தையை அவசரமாக பிரசங்கியுங்கள்” என அப்போஸ்தலன் பவுல் ஊக்குவித்தார். (2 தீ. 4:2, NW) அன்றாட வாழ்க்கையை ஸ்தம்பிக்க செய்யும் ஈரமான சீதோஷணநிலை, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் தெருக்கள், பருவகால நோய்கள் ஆகியவற்றால் மழை காலம் நம்மில் பலருக்குக் ‘கஷ்டமான காலமாக’ ஆகலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தவறாமல் ‘வார்த்தையைப் பிரசங்கிப்பது’ நமக்கு சவாலாக அமையலாம். எனினும், நல்ல திட்டமிடுதலும் விடாமுயற்சியும் இருந்தால் மழை காலம் நம் வைராக்கியத்தை தணித்துப் போடுவதைத் தவிர்க்கலாம்.
2 நன்கு சிந்தித்து செயல்படுவதும் முன்யோசனையும் பிரச்சினைகளைக் குறைக்கின்றன. குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் நல்ல குடை, ரெயின்கோட், பைபிளையும் பிரசுரங்களையும் பத்திரிகைகளையும் நனையாமல் பாதுகாக்க பொருத்தமான பை ஆகியவற்றை வாங்குவது ஞானமான செயல். டூ-வீலரை நீங்கள் உபயோகித்தால் ஈரமான அல்லது சகதி நிறைந்த தெருக்களில் வெகு கவனமாக ஓட்டுங்கள். ஜலதோஷத்தையும் தண்ணீரால் பரவும் வியாதிகளையும் தவிர்ப்பதற்கு கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுங்கள்.
3 உரையாடுவதற்கு உங்களை உள்ளே வரும்படி வீட்டுக்காரர்கள் பெரும்பாலும் அழைக்கும் பிராந்தியங்களை முடிந்தால் தேர்ந்தெடுங்கள். ஆர்வம் காட்டியவர்களைப் பற்றிய தகவல்களை தெளிவாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; அப்போதுதான் சீதோஷணநிலை மோசமாகையில் மறுசந்திப்புகளையாவது செய்ய முடியும். வெளியிலே கால் வைக்க முடியாத அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நாட்களில் என்ன செய்வது? டெலிஃபோனில் சாட்சி கொடுப்பதைப் பற்றி யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? 2001, பிப்ரவரி நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கையில் நடைமுறையான ஆலோசனைகள் சிலவற்றை நீங்கள் காணலாம். உங்களுக்கு சொந்தமாக ஃபோன் இல்லையென்றால் யாருக்கெல்லாம் கடிதம் மூலம் சாட்சி கொடுக்கலாம் என உங்களால் பட்டியல் போட முடியுமா?
4 அடைமழை பெய்கையில், பைபிள் படிப்பு படிப்பவர்களையும் ஆர்வம் காட்டுபவர்களையும் போய் சந்திக்க நாம் விரும்ப மாட்டோம். ஆனால் நாம் எடுக்கும் கூடுதல் முயற்சியால் விளையும் நல்ல பலனைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். ஒரு பெண்மணி இவ்வாறு சொன்னார்: “அந்தச் சாட்சிகளுடைய வைராக்கியத்தையும் நேர்மையையும் கண்டு நானும் என் கணவரும் அசந்துபோனோம். அவர்கள் தங்கள் ஊழியத்திற்கு சிறிய மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தினார்கள், மழை காலத்தில் கொட்டோ கொட்டென மழை கொட்டினாலும் அவர்கள் வராமல் இருக்க மாட்டார்கள்.” அந்தப் பெண்மணி பின்னர் முழுக்காட்டப்பட்ட சகோதரி ஆனார். மழையில் நனைய மனமிருந்ததால் எவ்வளவு அருமையான பலன்!
5 மழை காலத்தில் வெளி ஊழியம் தடைபடாமல் தொடர நடைமுறையான அட்டவணையை மூப்பர்கள், முக்கியமாக ஊழியக் கண்காணி தயாரிக்கலாம். நனையாமல் ஊழியம் செய்வதற்கு வசதியாக சபை பிராந்தியத்தில் பலமாடி குடியிருப்பு கட்டடங்கள் அல்லது காலனிகள் உள்ளனவா? இப்பகுதிகளை மழை காலத்தில் ஊழியம் செய்ய ஏன் ஒதுக்கக்கூடாது? காலேஜ் அல்லது யுனிவர்சிட்டி ஹாஸ்டல்கள், புயல் மழை காலத்தில் ஊழியம் செய்ய சிறந்த இடங்கள். மழை பெய்கிறது என்பதற்காக தெரு ஊழியத்தை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. நன்கு ஒழுங்கமைத்தால், ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்கள், பஸ் ஸ்டாண்டுகள், ரயில்வே ஸ்டேஷன்கள், அல்லது மழைக்கு ஓரளவு ஒதுங்க முடிந்த மற்ற பொது இடங்களிலும் விவேகத்துடன் ஊழியத்தை செய்யலாம்.
6 வறண்டு காணப்படும் நம் கிராமப் புற நிலங்களுக்கு தண்ணீர் புத்துணர்ச்சி அளிப்பது போல், ஜீவனை அளிக்கும் சத்தியத்தின் தண்ணீரைக் கண்டடைய மற்றவர்களுக்கு உதவும் சந்தோஷத்தை நாம் அனுபவிப்போமாக.—வெளி. 22:17.