“இதுவே மிகச் சிறந்த முடிவு”
“நூறாண்டுகளுக்கும் மேலாக, உண்மையான ஒற்றுமையையும், குறைகூற முடியாத நேர்மையையும் எல்லாவற்றிற்கும் மேலாக, அழிக்க முடியாத விசுவாசத்தையும் யெகோவாவின் சாட்சிகள் காட்டியிருக்கிறார்கள்” என்று ஸ்பெயினிலுள்ள ஒரு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் எழுதினார். நாத்திகரான இந்த ஆசிரியரை இப்படிச் சொல்லத் தூண்டியது எது?
அந்த மேல்நிலைப் பள்ளியின் மாணவியான நோயமீ என்ற யெகோவாவின் சாட்சி, தன் பள்ளிப் படிப்பின் இறுதி நிலைத் தேர்வின் பாகமாக ஒரு கட்டுரை எழுதும்படி நியமிக்கப்பட்டாள். அவளுடைய கட்டுரையே அந்த ஆசிரியரை அப்படி சொல்லத் தூண்டியது. “நாசி ஆட்சியில் ஊதாநிற முக்கோணங்கள்” என்ற தலைப்பில் கட்டுரை எழுத முடிவு செய்தாள்.
அவள் அந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்ததற்கு காரணமென்ன? “ஒரு ஆசிரியர், என் வேலையை மேற்பார்வை செய்வார் என்பதால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவருக்கு சாட்சி கொடுக்க நினைத்தேன். யெகோவாவின் சாட்சிகள் நாசி ஜெர்மனியில் தங்கள் உத்தமத்தில் உறுதியாக இருந்த விதத்தைப் பார்த்து மனம் நெகிழ்ந்து போயிருக்கிறேன். இது மற்றவர்கள் மனதையும் நெகிழச்செய்யும் என்று நம்பினேன்” என்கிறாள் அவள்.
நோயமீயின் கட்டுரை அவள் நினைத்ததைவிட மிக அதிகமானோரில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அக்டோபர் 5, 2002-ல், அறிவியல் மற்றும் மானிடவியலின் பேரில் ஆராய்ச்சிக்கான ஒரு தேசியப் போட்டியில், அவளது கட்டுரை பரிசைத் தட்டிச் சென்றது. அந்தத் தேசியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களை, பெயர்பெற்ற ஸ்பானிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 20 பேராசிரியர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.
ஸ்பெயின் நாட்டு கல்வி மந்திரி பீலார் தேல் காஸ்டீயோ என்பவரிடமிருந்து நோயமீ பரிசைப் பெற்றாள். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி யெகோவாவின் சாட்சிகள் நாஸி தாக்குதலுக்கு எதிராக உறுதியாய் நிற்கிறார்கள் என்ற வீடியோ கேசட் ஒன்றை அவருக்குக் கொடுத்தாள். அதை எந்தவித மறுப்புமின்றி அவர் சந்தோஷமாகப் பெற்றுக்கொண்டார்.
அவளது சொந்த ஊரான மான்ரேசாவில் உள்ளூர் பத்திரிகை ஒன்று அவளுடைய சாதனையைச் சிறப்பித்துக் காட்டியதோடு, அவளுடைய கட்டுரையின் சுருக்கத்தையும் வெளியிட்டிருந்தது. இதற்கிடையே, பள்ளியின் தலைமை ஆசிரியர் அவளுடைய கட்டுரையின் ஒரு பிரதியை கேட்டார். ஏன்? அந்தப் பள்ளியின் 75-வது ஆண்டுவிழாவின் நிகழ்ச்சிநிரல்களில் ஒன்றாக இதையும் சேர்ப்பதற்காகவே.
“என்னுடைய ஆசிரியர், திரு. ஹார்ஹே டோமாஸ் காலோட் என்னுடைய கட்டுரைக்கு எழுதியிருந்த முன்னுரையின் பின்வரும் பாகத்தை வாசித்தபோது நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்:
“நான் ஒரு நாத்திகன், ஆனாலும், சர்வத்துக்கும் பெரியவர் ஒருவர் இருக்கிறார் என்பதை மனமார நம்ப விரும்புகிறேன். ‘சக மனிதரிடம் உண்மையான அன்பைக் காட்டுவதற்கு’ அவர் தன்னை வணங்குபவர்களை ஊக்கமூட்டுகிறார்” என்று அவர் எழுதியிருந்தார். “என்னுடைய மேல்நிலைப் படிப்புக்கு, இதுவே மிகச் சிறந்த முடிவு” என்கிறாள் நோயமீ.