ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
“புது விஷயமாக இருக்கிறதே!”
டராட்டா என்பவர் போலந்திலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய முழுநேர ஊழியர். தனது 14-வயது மகனுக்கு ‘ரெகுலர் செக்கப்’ செய்வதற்காக பள்ளியிலுள்ள கிளினிக்கிற்கு அவனைக் கூட்டிக்கொண்டு சென்றார். டாக்டர் யானீனa அவனை பரிசோதனை செய்துகொண்டிருந்தபோது, வீட்டில் அவன் என்னென்ன வேலைகளை செய்வான் என டராட்டாவிடம் விசாரித்தார்.
“நான் முடியாமல் இருக்கும்போது எங்கள் வீட்டிலுள்ள ஆறு பேருக்கும் அவன் சாப்பாடு தயாரித்து விடுவான். வீட்டை பெருக்கி சுத்தம் செய்துவிடுவான், வீட்டில் சில ரிப்பேர் வேலைகளையும் பார்த்துவிடுவான். வாசிப்பது அவனுக்கு ரொம்ப பிடிக்கும். படிப்பில் கெட்டிக்காரன்” என டராட்டா கூறினார்.
“என்னால் நம்பவே முடியவில்லை. நான் இங்கு 12 வருஷமாக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன், இதுமாதிரி ஒருநாளும் கேள்விப்பட்டதில்லையே” என்றார் யானீனா.
சாட்சி கொடுப்பதற்கு இதை ஒரு நல்ல சந்தர்ப்பமாக கருதிய டராட்டா, “இந்தக் காலத்து பெற்றோர் நிறைய பேர் பிள்ளைகளுக்கு சரியான பயிற்றுவிப்பு கொடுக்கிறதில்லை. அதனாலதான் பெரும்பாலும் பிள்ளைகள் சுயமரியாதையை இழந்துவிடுகிறார்கள்” என விளக்கினார்.
“நிறைய பெற்றோருக்கு இந்த விஷயங்களைப் பற்றி ஒன்றுமே தெரியாதே. நீங்கள் எப்படி இதையெல்லாம் தெரிந்து கொண்டீர்கள்?” என்று கேட்டார் யானீனா.
அதற்கு டராட்டா இவ்வாறு பதிலளித்தார்: “இந்த மாதிரி விஷயங்களுக்கு பைபிள்தான் சிறந்த புஸ்தகம். உதாரணமாக, உபாகமம் 6:6-9 வசனங்கள் சொல்கிறபடி, பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கிறதுக்கு முன்னால், நாம் முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். நம் பிள்ளைகள் மனசில் பதியவைக்க விரும்புகிற ஒழுக்க நெறிமுறைகளை முதலில் நம் மனதிலேயும் இருதயத்திலேயும் பதிய வைக்க வேண்டாமா?”
“என்னால் இதை கொஞ்சமும் நம்ப முடியவில்லையே!” என்றார் யானீனா. பிறகு, பிள்ளைகளை வளர்ப்பதற்கும் போதிப்பதற்கும் பைபிள் அவருக்கு எவ்வாறு உதவியது என டராட்டாவிடம் கேட்டார்.
“வாரா வாரம் பிள்ளைகளுடன் சேர்ந்து நாங்கள் பைபிளை படிக்கிறோம். இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள்b என்ற புத்தகத்தை வைத்து நாங்கள் படிக்கிறோம்” என டராட்டா கூறினார். பிறகு, அந்தப் புத்தகத்தைப் பற்றி விளக்கி, அதிலுள்ள சில தலைப்புகளை குறிப்பிட்டார்.
“புது விஷயமாக இருக்கிறதே!” என யானீனா வியந்து கூறி, “அந்தப் புஸ்தகத்தை நான் கொஞ்சம் பார்க்கலாமா?” என்று கேட்டார்.
ஒரு மணிநேரத்திற்குப்பின், டராட்டா அந்தப் புத்தகத்தோடு அவரை வந்து சந்தித்தார்.
அந்தப் புத்தகத்தைப் புரட்டிக்கொண்டே, “நீங்கள் எந்த மதம்?” என யானீனா கேட்டார்.
“நான் ஒரு யெகோவாவின் சாட்சி.”
“மற்ற மதத்தாரை யெகோவாவின் சாட்சிகள் எப்படி நடத்துகிறார்கள்?”
“உங்களை நான் நடத்துகிற மாதிரியேதான்—மரியாதையுடன்” என டராட்டா பதிலளித்தார். அதோடு, “அவர்களும் பைபிள் சத்தியத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என்று சொன்னார்.
“உங்களிடம் இப்போது பேசினதே எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது” என யானீனா ஒத்துக்கொண்டார்.
அந்த சந்திப்பின் முடிவில், பைபிளை வாசிப்பதற்கு யானீனாவை டராட்டா உற்சாகப்படுத்தினார். “அது உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தமளிக்கும், உங்கள் வேலைக்கும் உதவியாக இருக்கும்.”
“அதைப் படிக்க வேண்டும் என்ற ஆசையை என் மனதில் உண்மையிலேயே தூண்டிவிட்டீர்கள்” என ஒத்துக்கொண்டார் யானீனா.
‘ரெகுலர் செக்கப்’-காக அந்த டாக்டரை சந்திக்க சென்ற சந்தர்ப்பத்தை சாதுரியமாக அதேசமயத்தில் மனவுறுதியுடன் சிறந்த சாட்சி கொடுப்பதற்கு டராட்டா நன்கு பயன்படுத்திக் கொண்டார்.—1 பேதுரு 3:15.
[அடிக்குறிப்புகள்]
a அவருடைய நிஜப் பெயர் அல்ல.
b யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.