உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சமீபத்தில் வெளிவந்த காவற்கோபுரம் பத்திரிகைகளை வாசித்து மகிழ்ந்தீர்களா? சரி, பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் விடையளிக்க முடியுமா என்று பாருங்கள்:
• சாப்பானுடைய குடும்பத்தைப் பற்றி கற்றுக்கொள்வதால் நாம் எவ்வாறு பயனடையலாம்?
யூதா ராஜாவான யோசியாவின் செயலராகவும் நகல் எடுப்பவராகவும் இருந்தவர் சாப்பான். அவர் ராஜ்யத்தில் அதிக செல்வாக்குள்ள மனிதராக விளங்கினார், உண்மை வணக்கத்தை திரும்ப நிலைநாட்ட ராஜா எடுத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுத்தார். சாப்பானின் மகன்களில் இருவர் எரேமியா தீர்க்கதரிசிக்கு உண்மையுடன் இருந்தார்கள். அவருடைய மற்றொரு மகனும் இரண்டு பேரன்களும் உண்மை வணக்கத்தை ஆதரிக்க தங்கள் செல்வாக்கை பயன்படுத்தினார்கள். அதேவிதமாக நாமும் உண்மை வணக்கத்தை ஆதரிக்க நம்முடைய வளங்களையும் செல்வாக்கையும் பயன்படுத்த வேண்டும்.—12/15, பக்கங்கள் 19-22.
• எவ்வாறு இரேனா ஹாக்ஸ்டென்பாக்கால் ஒரு பெரிய ஊனத்தை மேற்கொள்ளவும் யெகோவாவுக்கு சேவை செய்யவும் முடிந்தது?
அவர் ஏழு வயதாக இருந்தபோது தன் கேட்கும் திறனை இழந்தார். காது கேளாதவராக இருந்தபோதிலும் மற்றவர்களோடு எப்படி பேசுவதென கற்றுக் கொண்டார். இப்பொழுதோ (வட்டார கண்காணியான) தன் கணவருடன் நெதர்லாந்தில் உள்ள சபைகளுக்கு விஜயம் செய்கிறார்.—1/1, பக்கங்கள் 23-6.
• “வைராக்கியத்தோடு ராஜ்யத்தை அறிவிப்போர்” மாவட்ட மாநாட்டில் என்ன இரண்டு புதிய படிப்பு புத்தகங்கள் வெளியிடப்பட்டன?
உலகமுழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள், ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள் என்ற புதிய படிப்பு புத்தகத்தை பெற்றபோது மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர், இது விசேஷமாக புதிய பைபிள் மாணாக்கர்கள் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தை படித்து முடித்த பிறகு அவர்களுடன் சேர்ந்து படிக்கும் வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது. யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் (ஆங்கிலம்) என்ற மற்றொரு புதிய புத்தகம் யெகோவாவின் சிறந்த பண்புகளின் மீதும் அவருடைய செயல் தொடர்புகளின் மீதும் நம்முடைய கவனத்தை ஒருமுகப்படுத்துகிறது. மேலுமாக அவருடைய பண்புகளை வெளிப்படுத்துவதில் நாம் எவ்வாறு அவரை பின்பற்றலாம் என்பதையும் விளக்குகிறது.—1/15, பக்கங்கள் 23-4.
• “நீதிமான்களுடைய நினைவுகள் [“எண்ணங்கள்,” NW] நியாயமானவைகள்” என்ற நீதிமொழிகள் 12:5-ல் உள்ள கருத்து என்ன?
நீதிமான்களின் எண்ணங்கள் ஒழுக்கநெறிக்கு இசைவானவை, பாரபட்சமில்லாத, நியாயமான காரியங்களிடம் வழிநடத்துபவை. கடவுளிடமும் மற்றவர்களிடமும் உள்ள அன்பு நீதிமான்களைத் தூண்டுவதால் அவர்களுடைய உள்நோக்கங்கள் நல்லவை.—1/15, பக்கம் 30.
• வேலையில் சமநிலையை வளர்த்துக்கொள்ள ஒருவருக்கு எது உதவும்?
வேலையின் மதிப்பைப் பற்றிய பயிற்றுவிப்பை பிள்ளைப் பருவத்திலிருந்தே கொடுப்பது உதவியளிக்கும். வேலையைப் பற்றிய சமநிலையான நோக்குநிலையை பைபிள் ஊக்கப்படுத்துகிறது, அது சோம்பேறித்தனத்தை ஆதரிப்பதில்லை. (நீதிமொழிகள் 20:4) மேலுமாக எப்போதும் வேலையே கதியென்று அதிலேயே மூழ்கிவிடாமல் இருக்கும்படியும் கிறிஸ்தவர்களை எச்சரிக்கிறது. கடவுளுடைய சேவையே நம்முடைய வாழ்க்கையில் மிக முக்கியமான இடத்தை பெறுகிறது என்பதை நாம் உணர வேண்டும். (1 கொரிந்தியர் 7:29-31) எல்லாவற்றிற்கும் மேலாக கடவுள் நம்மை கைவிடமாட்டார் என்றும் உண்மை கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்.—2/1, பக்கங்கள் 4-6.
• பைபிளில் முதன் முதலாக பலிபீடத்தைப் பற்றி எங்கே குறிப்பிடப்படுகிறது?
பலிபீடத்தைப் பற்றி முதன் முதலாக ஆதியாகமம் 8:20-ல் குறிப்பிடப்படுகிறது. அது, ஜலப்பிரளயத்திற்குப் பிறகு பேழையிலிருந்து வெளியே வந்தவுடன் நோவா கட்டிய பலிபீடமாகும். அதேவிதமாகவே காயீனும் ஆபேலும் யெகோவாவுக்கு தங்கள் காணிக்கைகளை செலுத்த பலிபீடங்களை பயன்படுத்தியிருக்கலாம். (ஆதியாகமம் 4:3, 4)—2/15, பக்கம் 28.
• மாறிவரும் சூழ்நிலைகளை கிறிஸ்தவர்கள் சிலர் எவ்வாறு ஞானமாக பயன்படுத்துகின்றனர்?
கிறிஸ்தவர்கள் சிலர், தங்கள் வேலைகளை தாங்களே மாற்றியதால் அல்லது மாற்றங்களை ஏற்றுக் கொண்டதால் ஊழியத்தில் அதிக மணிநேரம் செலவிட முடிந்திருக்கிறது. வேறு சிலர் தங்கள் குடும்ப பொறுப்புகள் குறைந்தபோது, அதாவது அவர்களுடைய பிள்ளைகள் பெரியவர்களாக வளர்ந்த பிறகும் திருமணமாகி சென்ற பிறகும், கடவுளுடைய சேவையில் அதிக நேரம் செலவிட்டு ஊழியத்தில் கூடுதலான வாய்ப்புகளை பயன்படுத்தினர்.—3/1, பக்கங்கள் 19-22.
• யோனா மற்றும் அப்போஸ்தலன் பேதுருவின் உதாரணங்கள் எவ்வாறு மற்றவர்களை யெகோவாவின் கண்ணோட்டத்தில் பார்க்க உதவுகின்றன?
யோனா, பேதுரு ஆகிய இருவருமே தங்கள் சிந்தனைகளிலும், விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதல் சம்பந்தப்பட்ட சோதனைகளை சமாளித்த விதத்திலும் தவறுகள் செய்தனர்; அவர்கள் செய்தது தவறு என்பது எல்லாருக்கும் நன்றாகவே தெரியும். இருந்தபோதிலும் அவர்களிடமிருந்த நல்ல பண்புகளை யெகோவா பார்த்தார், தொடர்ந்து தம்முடைய சேவையிலும் அவர்களை பயன்படுத்தினார். மற்றவர்கள் நம்மை புண்படுத்தினாலோ நமக்கு ஏமாற்றம் அளித்தாலோ, கடந்த காலத்தில் நம்மை கவர்ந்த அவர்களது நல்ல குணங்களையும் கடவுள் அவர்களிடம் பார்க்கும் நல்லதையுமே பார்ப்போமாக.—3/15, பக்கங்கள் 16-19.
• சங்கீத புத்தகத்தின் எண்கள் ஏன் பல்வேறு பைபிள் மொழிபெயர்ப்புகளில் வேறுபடுகின்றன?
மூல எபிரெய மொழியிலுள்ள புத்தகத்துக்கும் அதிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க செப்டுவஜின்ட்டுக்கும் இடையே சங்கீத புத்தகத்தின் எண்கள் வேறுபடுகின்றன. ஆகவே சமீப மொழிபெயர்ப்புகள் எபிரெய வாசகத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றனவா செப்டுவஜின்ட்டை அடிப்படையாக கொண்டிருக்கின்றனவா என்பதைப் பொறுத்து எண்கள் வேறுபடுகின்றன.—4/1, பக்கம் 31.