பைபிளை புரிந்துகொள்ள உதவி
பைபிள்—ஈடிணையற்ற ஒரு நூல். இது கடவுளுடைய ஏவுதலால் எழுதப்பட்டது என இதன் எழுத்தாளர்கள் சொல்கிறார்கள், இது உண்மையே என்பதற்கு இதிலுள்ள விஷயங்கள் ஏராளமான சான்றளிக்கின்றன. (2 தீமோத்தேயு 3:16) நாம் எங்கிருந்து வந்தோம், நாம் ஏன் இங்கே இருக்கிறோம், நாம் எங்கே போகிறோம் என்ற கேள்விகளுக்கும் இன்னும் பிற கேள்விகளுக்கும் பைபிள் பதிலளிக்கிறது. நிச்சயமாகவே, நாம் ஆராய்ந்து பார்ப்பதற்கு தகுதியான நூல்!
ஒருவேளை பைபிளை வாசிப்பதற்கு நீங்கள் முயற்சி செய்திருக்கலாம், ஆனால் அதை புரிந்துகொள்வதோ உங்களுக்கு கடினமாக இருந்திருக்கலாம். அல்லது, உங்களுடைய கேள்விகளுக்கு எங்கே பதில்களை தேடுவது என்றே உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அப்படியானால் கவலையே படாதீர்கள், இப்படி அலைமோதுவது நீங்கள் மாத்திரமே அல்ல. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மனிதனுடைய சூழ்நிலைமையும் உங்களுடையதை போன்றதே. அவர் எருசலேமிலிருந்து தன்னுடைய சொந்த நாடாகிய எத்தியோப்பியாவிற்கு ரதத்தில் சவாரி செய்துகொண்டிருந்தார். இந்த எத்தியோப்பிய அதிகாரி ஏசாயா என்ற பைபிள் தீர்க்கதரிசன புத்தகத்தை—எழுநூறுக்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட புத்தகத்தை—சப்தமாக வாசித்துக்கொண்டிருந்தார்.
திடீரென ஒருவர் அந்த ரதத்தோடு சேர்ந்து ஓடிவந்து அவரிடம் பேச்சுக் கொடுத்தார். அவர்தான் பிலிப்பு, இயேசு கிறிஸ்துவின் சீஷன். “நீர் வாசிப்பதின் பொருள் உமக்குத் தெரிகின்றதா?” என்று அந்த எத்தியோப்பியனிடம் அவர் கேட்டார். “யாராவது விளக்கிக் காட்டாவிட்டால் எவ்வாறு என்னால் தெரிந்துகொள்ள முடியும்?” என்று அந்த எத்தியோப்பியன் பதிலளித்தார். பின்பு பிலிப்புவையும் தன்னுடைய ரதத்தில் ஏற்றிக்கொண்டார். அந்த மனிதன் வாசித்துக்கொண்டிருந்த பகுதியின் அர்த்தத்தை பிலிப்பு விளக்கி காண்பித்தார், மேலும் “இயேசுவைப் பற்றிய நற்செய்தியை”யும் அவருக்கு அறிவித்தார்.—அப்போஸ்தலர் [திருத்தூதர் பணிகள்] 8:30-35, பொது மொழிபெயர்ப்பு.
வெகு காலத்திற்கு முன்பு கடவுளுடைய வார்த்தையைப் புரிந்துகொள்ள அந்த எத்தியோப்பியனுக்கு பிலிப்பு உதவி செய்தது போலவே, பைபிளை புரிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகளும் இன்று மக்களுக்கு உதவி செய்கிறார்கள். உங்களுக்கும் உதவி செய்ய ஆவலோடு இருக்கிறார்கள். பொதுவாக, அடிப்படை பைபிள் போதனைகள் தொடங்கி, பைபிளை முறைப்படி படிப்பது மிகவும் நல்லது. (எபிரெயர் 6:1, 2) நீங்கள் முன்னேற முன்னேற, ‘பலமான ஆகாரம்’ என்று அப்போஸ்தலன் பவுல் அழைத்ததை, அதாவது ஆழமான சத்தியங்களை பெற முடியும். (எபிரெயர் 5:14) நீங்கள் படிப்பது பைபிளாக இருந்தாலும், பல்வேறு விஷயங்களில் பைபிளில் உள்ளதை கண்டுபிடிப்பதற்கும் அவற்றை புரிந்துகொள்வதற்கும் பிற பிரசுரங்களும்—பைபிள் படிப்புக்கு உதவும் நூல்களும்—உங்களுக்கு உதவியாக இருக்கும்.
உங்களுக்கு வசதியான நேரத்திலும் இடத்திலும் படிப்பை ஏற்பாடு செய்துகொள்ளலாம். சிலர் தொலைபேசி வாயிலாகவும் படிக்கிறார்கள். வகுப்பில் பாடம் நடத்துவது போல படிப்பு நடத்தப்படாது. இது, உங்களுடைய தனிப்பட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்பவும் உங்களுடைய பின்னணி மற்றும் கல்விக்கு ஏற்பவும் மாற்றியமைக்கப்படும். இப்படி பைபிள் படிப்பதற்கு நீங்கள் காசோ பணமோ கொடுக்க வேண்டியதில்லை. (மத்தேயு 10:8) பரீட்சைகள் இருக்காது, நீங்கள் தர்மசங்கடப்பட வேண்டியதும் இருக்காது. உங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கப்படும், கடவுளிடம் அண்டிவருவது எப்படி என்பதை நீங்கள் கற்றுக்கொள்வீர்கள். ஆனால், நீங்கள் ஏன் பைபிளை படிக்க வேண்டும்? பைபிள் படிப்பு உங்களுடைய வாழ்க்கைக்கு ஏன் மகிழ்ச்சியை வாரிவழங்கும் என்பதற்கான காரணங்கள் சிலவற்றை கவனியுங்கள்.