மெளனம் சம்மதத்திற்கு அறிகுறி
நாஸிஸத்தில் மதம் வகித்த பங்கைப் பற்றி நம்பிக்கை துரோகம்—ஜெர்மன் சர்ச்சுகளும் படுகொலையும் என்ற ஆங்கில நூல் ஒளிவுமறைவின்றி எடுத்துரைக்கிறது. “பொதுவாக கிறிஸ்தவர்கள் அனைவரும் நாஸி ஆட்சியை ஆதரித்தார்கள். யூதர்கள் படுகொலை செய்யப்பட்டதை பெரும்பான்மையர் ஆட்சேபிக்கத் தவறிவிட்டார்கள். அவர்களது மெளனம் சம்மதத்திற்கு அறிகுறியாக இருந்தது” என்று அப்புத்தகம் சொல்கிறது.
கிறிஸ்தவர்கள் என உரிமை பாராட்டியவர்களை நாஸிக் கொள்கையினிடம் கவர்ந்திழுத்தது எது? “ஜெர்மனியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட” ஹிட்லர் எடுத்த நடவடிக்கைகள் அநேகரை மோசம்போக்கின என அப்புத்தகம் விளக்குகிறது. அது சொல்கிறது: “ஆபாசம், விபச்சாரம், கருக்கலைப்பு, ஓரினப்புணர்ச்சி, நவீன கலையில் காணப்படும் ‘அசிங்கம்’ ஆகியவற்றை அவர் எதிர்த்தார். நான்கு, ஆறு, எட்டு பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு முறையே வெண்கலம், வெள்ளி, தங்கப் பதக்கங்களை வழங்கி, பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்ற பாரம்பரிய பண்பாட்டை ஊக்குவித்தார். தேசீய அளவில் தங்களை இழிவுபடுத்திய வெர்சாலிஸ் ஒப்பந்தத்திற்கு பதிலடி கொடுப்பதற்காக ஹிட்லர் இராணுவ தேசீயவாதத்தை கொண்டுவந்தார். இதுவும் அவர் ஊக்குவித்த பாரம்பரிய பண்பாடுமே நாஸிக் கொள்கையிடம், கிறிஸ்தவர்கள் உட்பட, அநேகரை கவர்ந்திழுத்தது.”
ஆனால் ஒரு தொகுதியினர் தனித்து நின்றனர். “யெகோவாவின் சாட்சிகள் வன்முறையிலோ இராணுவத்திலோ ஈடுபட மறுத்துவிட்டார்கள்” என நம்பிக்கை துரோகம் புத்தகம் குறிப்பிடுகிறது. இதனால், இந்தச் சிறு தொகுதியினர் கொடூர தாக்குதலுக்கு ஆளாயினர், அதன் அங்கத்தினர்கள் அநேகர் சித்திரவதை முகாம்களில் போடப்பட்டனர். ஆனால் கிறிஸ்துவை பின்பற்றுவதாக உரிமை பாராட்டியவர்களோ எந்த ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை. அப்புத்தகம் மேலும் சொல்கிறது: “யெகோவாவின் சாட்சிகள் மீது பரிதாபப்படுவதற்குப் பதிலாக, கத்தோலிக்கரும் புராட்டஸ்டன்டினரும் அதிக பகைமையைத்தான் காட்டினார்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய சமாதானத்திற்கான நெறிமுறைகளைக் காட்டிலும் ஹிட்லருடைய கொடூர நெறிமுறைகளைத்தான் அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.” அவர்களுடைய மௌனம், நாஸி ஆட்சியில் யெகோவாவின் சாட்சிகள் இன்னும் அதிகமாக சித்திரவதை செய்யப்படுவதற்கு அடிகோலியது என்பதில் சந்தேகமே இல்லை.
நாஸி அரசியலில் சர்ச்சுகள் ஈடுபட்டது சூடான வாக்குவாதத்திற்குரியதாக இருக்கிறபோதிலும், “அந்த ஆட்சியை ஆதரிப்பதற்கு அல்லது அதற்கு உடந்தையாக இருப்பதற்கு மறுத்த மதத் தொகுதியினர்” என யெகோவாவின் சாட்சிகளை அழைக்கிறது நம்பிக்கை துரோகம் புத்தகம்.