தாயிற்சிறந்த அன்பு
சுரங்கப் பாதை இரயில் நிலையங்களிலோ, பொது கழிப்பிடங்களிலோ, நெரிசல்மிக்க தெருக்களிலோ தாய்மார்கள் தங்கள் பச்சிளங்குழந்தைகளை அம்போவென விட்டுவிட்டு போய்விடுகின்றனர். சில சமயங்களில் குப்பைக்கூளங்களை வாரிச்செல்பவர்கள் குப்பைத் தொட்டிகளில் தங்கள் அம்மாக்களுக்காக அழுது அழுது ஓய்ந்துபோன சிசுக்களை கண்டெடுத்திருக்கின்றனர். “தெருக்களிலே குழந்தைகளை நாதியற்று விட்டுச்செல்வது அதிகரித்து வருகிறது” என்று ஓ எஸ்டடோ டே எஸ். பாலோ செய்தித்தாள் சொல்கிறது. இவ்வாறு விட்டுச்செல்லும் இளம் தாய் அதற்காக பின்னால் வருந்தலாம். அந்தத் தாய் தன் கண்மணியை விட்டுசெல்வது அதன் உயிரையே பறித்துவிடும், இருந்தாலும் போகிறாள்.
‘அந்தப் பிஞ்சின் எதிர்காலம் என்னவாகும் என கொஞ்சமும் யோசிக்காமல் அதை நிராதரவாக விட்டுச்செல்ல பத்துமாசம் சுமந்து பெத்தவளுக்கு எப்படிதான் மனம்வருமோ’ என நீங்கள் வியக்கலாம். சிருஷ்டிகர் தம் பிள்ளைகளின்மீது எவ்வளவு ஆழமான அன்பை வைத்திருக்கிறார் என்பதை விவரிக்க பைபிள் இப்படிப்பட்ட சோகமான நிலையை உவமையாக பயன்படுத்துகிறது. அது சொல்வதாவது: “ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.”—ஏசாயா 49:15.
தாயைக் காட்டிலும் அதிகமான அன்பை நம்மீது கடவுள் பொழிகிறார். நம்முடைய தேவைகளை உடனடியாக கவனிக்கிறார். நீங்கள் சிறியவராக இருந்தாலும்சரி பெரியவராக இருந்தாலும்சரி, நீங்கள் எதிர்ப்படும் பிரச்சினைகளை தனியாக இருந்து சமாளிக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுடைய சிருஷ்டிகர் உங்களுக்கு உதவ விரும்புகிறார்; உங்கள் நலனில் அக்கறை உள்ளவராகவும் இருக்கிறார். “என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் [“யெகோவா,” NW] என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்” என்றே சங்கீதக்காரன் சொன்னார்.—சங்கீதம் 27:10.
‘ஒன்றான மெய் தேவனாகிய’ யெகோவாவையும் அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்துவையும் பற்றிய அறிவை பெறுவதற்கே உலகம் முழுவதும் காவற்கோபுரம், விழுத்தெழு! பத்திரிகைகள் பிரசுரிக்கப்படுகின்றன. இந்த அறிவை ஆர்வத்தோடு பெறுவோருக்கு அது நித்திய ஜீவனை அளிக்கும்.—யோவான் 17:3.