தூண்டுதலளிக்கும் பதில்
வேல்ஸ்-ல் உள்ள ஒரு வாசகரிடமிருந்து வந்த பின்வரும் கடிதத்தை கேத்தலிக் ஹெரல்ட் என்ற பிரிட்டிஷ் ரோமன் கத்தோலிக்க செய்தித்தாள் சமீபத்தில் பிரசுரித்தது: “ஒரு நாள் இரவில் யெகோவாவின் சாட்சிகளில் இருவர் என் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் மேற்கோள் காட்டிய புதிய ஏற்பாட்டின் நம்பத்தக்கத் தன்மைக்கு கத்தோலிக்க சர்ச்சுதான் உத்தரவாதமளித்தது என்று அவர்களிடம் சொல்லி ஒருவாறாக சமாளித்தேன். அவர்களில் ஒருவர் அதை ஒப்புக்கொண்டது எனக்கு ஆச்சரியமாயிருந்தது. ‘ஆம், நீங்கள் அதற்கு உத்தரவாதமளிப்பீர்கள், ஆனால் அதை பின்பற்றமாட்டீர்கள்’ என்று அவர் சொன்னார். ‘“நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டும்” என்று இயேசு சொன்னார், ஆனால் நீங்களோ ஒருவரையொருவர் கொலை செய்கிறீர்கள். கடைசியாக நடந்த போரில் கத்தோலிக்கர் கத்தோலிக்கரை கொலை செய்தனர், ஆனால் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர்கூட ஒரு [உடன்] சாட்சியை கொலை செய்யவில்லை.’ நான் இதை ஒத்துக்கொள்ளாமல் வேறென்ன செய்வது? நம் மத்தியில் உண்மையான ஐக்கியம் இல்லையென்றால் ‘பிரிந்திருக்கும் நம் சகோதரர்களோடு’ ஐக்கியமாய் இருப்பதற்காக நாம் எப்படி ஜெபிக்கமுடியும்? நாம் இந்த இழிவான செயலை முதலாவது சரிசெய்ய வேண்டாமா?”—யோவான் 15:12.
இந்த இருபதாம் நூற்றாண்டில் நடந்த இரண்டு உலக போர்களில் ஐந்து முதல் ஆறு கோடி வரையிலான ஆட்கள் கொல்லப்பட்டனர். இந்த இரண்டு போர்களுமே கிறிஸ்தவமண்டலத்தில் ஆரம்பிக்கப்பட்டவை. அந்தப் போர்களில் யெகோவாவின் சாட்சிகள் பங்கெடுக்கவில்லை, தற்போது நடக்கும் எந்த சண்டைகளிலும் அவர்கள் ஈடுபட்டுக்கொண்டில்லை என்பதை உண்மையாய் சொல்லமுடியும். எப்படி இவ்வாறு இருக்கமுடியும்? உலகமுழுவதிலும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் காணப்படும் பலமான கட்டுகளாகிய கிறிஸ்தவ அன்பையும் ஐக்கியத்தையும் பற்றி அதிகமாக அறிந்துகொள்வது உங்களுக்கு பயனளிக்கும்.—ஏசாயா 2:4-ஐ ஒப்பிடுக.