முதியோர் படும் பாடுகள்
ஓனியன் என்ற அம்மாவுக்கு வயது 68, அவர் மேற்கு ஆப்பிரிக்காவின் முக்கிய நகரம் ஒன்றில் வாழ்ந்துவருகிறார். தன்னுடைய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் சூழ்ந்திருக்க, அமைதியாக ஓய்வெடுப்பதில் மகிழ்ச்சியாக தன் முதுமை காலத்தை கழிக்கவேண்டும் என்பது அவரது இளமைக்கால கனவாக இருந்தது. இப்போதோ, வெப்பமண்டலத்தில் கொளுத்தும் வெயிலில் குளிர்ந்த தண்ணீரை விற்பதன்மூலம் தன் பகல்பொழுதை ஓட்டுகிறார். அதனால் கிடைக்கும் கொஞ்ச வரும்படிதான் வயிற்றுப் பிழைப்புக்கு உதவுகிறது. அவரது இரண்டு மகன்களும் வேறொரு நாட்டில் தொலைதூரத்தில் இருக்கிறார்கள். அவர்கள் பணம் அனுப்பி எவ்வளவோ காலம் ஆகிறது.
முன்பெல்லாம், ஆப்பிரிக்காவில், வயதானவர்களை மிக உயர்வாக மதித்தார்கள். அவர்களது அனுபவத்திற்காகவும், அறிவிற்காகவும், அதோடுகூட பெரும்பாலும் அவர்கள் வழங்கும் ஞானம், விவேகம் ஆகியவற்றிற்காக மரியாதை தரப்பட்டது. பேரப்பிள்ளைகளை வளர்ப்பதில் அவர்கள் உதவினார்கள். அவர்களது புத்திமதியையும், அங்கீகாரத்தையும் வயதில் இளையவர்கள் நாடினார்கள். பைபிளின் ஆலோசனைக்கு ஏற்ப மக்கள் வாழ்ந்துவந்தார்கள்: ‘நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் [அல்லது முதிர்வயதுள்ளவள்] முகத்தைக் கனம்பண்ணு.’—லேவியராகமம் 19:32.
காலங்கள் மாறிவிட்டன. வறுமை, பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், கும்பல் கும்பலாக நகரங்களுக்கு குடிபெயர்தல் ஆகிய காரணங்களால் வயதானவர்கள் தங்களைத் தாங்களே பராமரித்துக்கொள்ளும்படி கைவிடப்படுகிறார்கள். ஹெல்ப் ஏஜ் கென்னியாவின் டைரக்டராக இருக்கும் கெம்லிஸ் வெர் என்பவர் இவ்வாறு கூறுகிறார்: “வயதானவர்களை ஆதரிக்கவேண்டும், பராமரிக்கவேண்டும் என்ற பண்பாடு மெல்ல மெல்ல நலிந்துவருகிறது.”
உண்மைதான், குடும்ப பிணைப்புகள் நலிந்து வருவது ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் அல்ல. ஜப்பானைப் பற்றி சொல்லும்போது, கார்டியன் வீக்லி இவ்வாறு அறிக்கை செய்கிறது: “பெற்றோருக்கு பிள்ளைகள் காட்டவேண்டிய பாசப்பிணைப்பே கன்பூசியஸ் மதத்தால் வழங்கப்பட்ட ஜப்பானிய தார்மீக நெறிமுறைக்கு மணிமுடியாகத் திகழ்ந்தது, ஆனால் நகரமயம் ஆக்கப்பட்டதால் அது மறைந்து வருகிறது. குடும்ப பிணைப்புகள் நலிந்துவருகின்றன: இன்று, 85 சதம் ஜப்பானியர்கள் மருத்துவமனைகளில் அல்லது முதியோர் இல்லங்களில் இறக்கிறார்கள்.”
என்ன காரணங்கள் இருந்தாலும் சரி, கடவுளை உண்மையில் பிரியப்படுத்தவேண்டும் என்று விரும்பும் ஆட்கள், தங்கள் பெற்றோரை கௌரவிப்பதில் கடும் முயற்சி எடுப்பார்கள். அவர்கள் பின்வரும் பைபிள் ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறார்கள்: “உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.” (எபேசியர் 6:2, 3) வயதான பெற்றோர்களை கனம்பண்ணுவதும், பராமரிப்பதும் அவ்வளவு ஒன்றும் சுலபம் அல்ல என்பது உண்மைதான், ஆனால் அவ்வாறு செய்வது பெரும் நன்மைகளை கொண்டுவருகிறது.