அறுவடைகாலம்!
‘கிறிஸ்தவத்தின்’ சரித்திரம் ஏன் அவ்வளவு கிறிஸ்தவமற்றதாய் இருந்திருக்கிறது? அநேக சிந்திக்கும் ஆட்கள் இந்தக் கேள்வியைக் கேட்கின்றனர்; ஆனால் ஏறக்குறைய 2,000 வருடங்களுக்குமுன் ஓர் உவமையில் இயேசு அதற்குப் பதிலளித்தார். அவர் “தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷ”னைப்பற்றி சொன்னார். பின்னர், “அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்”டான். விதைகள் வளர்ந்து கதிர்விட்டபோது, வேலையாட்கள் களைகளைக் கவனித்து அவற்றைப் பிடுங்கிவிட விரும்பினர். ஆனால் அந்த மனிதன் சொன்னான்: “இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள்.” அறுவடைகாலத்தில், கோதுமை களைகளிலிருந்து பிரிக்கப்படும்.—மத்தேயு 13:24-30.
அந்த உவமையை விவரிக்கையில் இயேசு, அந்த “நல்ல விதையை”—மெய்க் கிறிஸ்தவர்களை—விதைத்தவர் தாம்தான் என்று கூறினார். “களைகளை”—சபைக்குள் உட்புகுந்த போலிக் கிறிஸ்தவர்களை—விதைத்த அந்தச் சத்துரு சாத்தான். பொய் மற்றும் மெய்க் கிறிஸ்தவர்கள் சேர்ந்திருக்கும்படி இயேசு அனுமதித்தார்—ஆனால் அறுவடை வரை மட்டுமே. அதற்குப்பின் அவர்கள் பிரிக்கப்படுவார்கள்.—மத்தேயு 24:36-44.
எனவே, நூற்றாண்டுகளினூடே ‘கிறிஸ்தவ’ அமைப்புகள் புறமதக் கொள்கைகளை ஏற்றுக்கொள்தல், ஒழுக்கயீனத்தைப் பொறுத்துக்கொள்தல், ஆட்கொள்வதற்கான போர்களை ஆதரித்தல், கொடூரமான ஒடுக்குமுறை விசாரணைகளை நடத்துதல் ஆகியவற்றின் மூலம் கடவுளை அவமரியாதை செய்திருக்கின்றனர் என்பதைக் கற்றறிகையில் நாம் ஆச்சரியப்படுவதில்லை. சாத்தானால் விதைக்கப்பட்ட கெட்ட விதையை நாம் இதில் அறிந்துகொள்ள முடிகிறது. எனினும், பைபிள் நியமங்களை விட்டுக்கொடுப்பதற்கு மாறாக சிறைத்தண்டனையை அல்லது மரணத்தை அனுபவித்த தனி நபர்களைப்பற்றி நாம் வாசிக்கும்போது, நல்ல விதை தடம் இல்லாமல் போக விடப்படவில்லை என்று நாம் பார்க்கிறோம்.
அறுப்பு “உலகத்தின் முடிவு” என்று இயேசு சொன்னார். இந்த தற்போதைய உலகின் காரிய ஒழுங்குமுறையின் முடிவில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதால், இது அறுவடைகாலமாக இருக்கவேண்டும்! ஆகவே மெய் மற்றும் பொய்க் கிறிஸ்தவர்களுக்கு இடையே ஒரு பிரிக்கும் வேலை நடந்திருக்கவேண்டும். இன்று, மெய்க் கிறிஸ்தவர்களைப்பற்றிய இயேசுவின் விவரிப்பிற்குப் பொருந்தும் வெறும் சிதறப்பட்ட தனி நபர்கள் அல்ல, ஒரு ஜனம் இருக்கவேண்டும்—கடவுளுடைய ராஜ்யத்திற்குக் கீழ்ப்பட்டு, அதைப்பற்றிய நற்செய்தியைப் பிரசங்கித்து, பைபிள் பூர்வ ஒழுக்கத்தை முன்னேற்றுவித்து, பைபிள் சத்தியத்தின் சாதகமாக புறமத கோட்பாடுகளை நிராகரித்து, கடவுளுடைய பெயரை வெளிப்படுத்தி, உலகின் பாகமாக இல்லாதவர்களாக அவர்கள் இருக்கவேண்டும்.—மத்தேயு 6:33; 24:14; யோவான் 3:20; 8:32; 17:6, 16.
நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம், அப்படிப்பட்ட ஒரு ஜனம் இருக்கிறது! ஏற்கத்தக்கவிதத்தில் கடவுளைச் சேவிக்க நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த மக்களைத் தேடுங்கள்; அவர்களுடன் சேர்ந்து கடவுளைச் சேவியுங்கள்.