முன்னறிவிக்கப்பட்ட பஞ்சம்
சமீப வருடங்களில் பஞ்சத்தின் கோரக்காட்சி உலக செய்தி அறிக்கைகளில் வேதனைக்குரியவிதத்தில் பொதுவானதாகிவிட்டது. எதியோபியாவிலிருந்தும் மற்ற இடங்களிலிருந்தும் மறக்கமுடியாத துன்பக்காட்சிகள் வந்திருக்கின்றன. வறட்சி மற்றும் யுத்தம் காரணமாக ஏற்படுத்தப்பட்ட சோமாலியாவின் அவலமான பஞ்சத்தின் பலியாட்கள்மீது 1992-ல் உலக கவனம் ஈர்க்கப்பட்டது. இன்டர்நேஷனல் ஹெரால்ட் டிரிப்யூன் செப்டம்பர் 1992-ல் இவ்வாறு அறிக்கை செய்தது: “எத்தனை சோமாலியர்கள் இறந்திருக்கின்றனர் என்று எவருக்கும் தெரியாது, ஆனால் 1,00,000-ற்கும் மேற்பட்ட எண்ணிக்கையைச் செஞ்சிலுவை (Red Cross) குறிப்பிடுகிறது. ஆயிரக்கணக்கில் இல்லையென்றாலும், நூற்றுக்கணக்கானோர் தினமும் இறக்கின்றனர்.”
உட்பட்டிருக்கும் தனி நபர்களின் துயரத்தையும் வேதனையையும் குறித்து அந்த எண்ணிக்கைகள் உண்மையில் எதையும் தெரிவிப்பதில்லை. சர்வதேச அகதிகளின் ஐரோப்பிய பிரதிநிதி ஈவட் பையர்பாயோலீ, அகதிகள் (Refugees) என்ற ஐநா பத்திரிகையில் எழுதினார்: “நியூயார்க்கிலோ ஜெனீவாவிலோ, அகதிகளைப்பற்றிய கேள்வி நேரடியாகக் காணப்படுகிறது; எண்கள் குறிப்பிடப்பட்டு, அவற்றைத் தொடர்ந்து சேர்க்கப்பட்டிருக்கும் பூஜ்யங்கள் கிரகித்துக்கொள்வதற்குக் கடினமாக இருக்கின்றன. ஆனால் ஆயிரக்கணக்கான கிலோமீட்டருக்கு அப்பால், ஏறக்குறைய சட்டமில்லா நிலையின்கீழ் இருக்கும் நாடுகளின் எல்லைப்புற பகுதிகளில், உணர்ச்சிகள் உங்கள் தொண்டையை அடைக்கின்றன; மேலும் துன்பத்தின் பேரளவு உங்களை அலறவேண்டும்போல் செய்கிறது.”
இதுவரையிலும் மனிதாபிமான உணர்வுடன் செய்யப்பட்ட இடருதவி பணிகளில் மிகப் பெரியது சோமாலியாவிற்கு உதவுவதற்கான அதன் முயற்சிகளே என்று செஞ்சிலுவை சொல்லுகையில், அந்த உதவி மிகவும் குறைவானதும், மிகவும் தாமதமானதுமாக இருந்தது என்பதே பொதுவான கருத்து என அநேக பார்வையாளர் வருத்தம் தெரிவிக்கின்றனர். பையர்பாயோலீ வருத்தத்துடன் தெரிவிக்கிறார்: “நன்கொடை அளிக்கும் நாடுகள், சிதைவுற்றுக்கொண்டிருக்கும் ஓர் ஆப்பிரிக்காவுக்கு ஆதரவளிப்பதில் சோர்ந்துபோய் உதவியைத் தொடர ஆர்வமற்றவர்களாய் இருக்கின்றன. . . . அவர்களுடைய தரக்குறைவான செயலாட்சிக்கும், அவர்களது தலைவர்களின் பேராசைக்கும், முடிவுபெறாததாகத் தோன்றும் சச்சரவுகளுக்கும் அவை ஆப்பிரிக்கர்களைக் குற்றஞ்சாட்டுகின்றன.”
“பல இடங்களில்” பஞ்சங்கள் ஏற்படும் ஒரு காலத்தைப் பைபிள் முன்னறிவித்தது. இந்தப் பஞ்சங்களும், யுத்தங்கள், பூமியதிர்ச்சிகள், கொள்ளைநோய்கள் போன்ற மற்ற அநேக காரியங்களின் தோற்றத்துடன் சேர்ந்து, கடவுளுடைய ராஜ்யம் அருகாமையில் இருப்பதைச் சுட்டிக்காண்பிக்கின்றன. (லூக்கா 21:11, 31) இந்த நற்செயலாற்றும் கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ், மனிதவர்க்கம் முழுவதுக்கும் ஏராளமான உணவு இருக்கும் என்று பைபிள் மேலும் காண்பிக்கிறது. “பூமியில் ஏராளமான தானியம் உண்டாயிருக்கும்,” என்று சங்கீதக்காரன் எழுதினார். “மலைகளின் உச்சியில் நிறைந்து வழியும்.”—சங்கீதம் 72:16, NW.