உங்களுக்கு நினைவிருக்கிறதா?
அண்மையில் வெளியான காவற்கோபுரம் பிரதிகளை வாசிப்பதை நீங்கள் அனுபவித்துக்களித்தீர்களா? அப்படியானால், சந்தேகமின்றி பின்வருபவற்றை ஞாபகப்படுத்திப் பார்க்க ஆர்வமுள்ளவர்களாய் இருப்பீர்கள்:
◻ முதல் நூற்றாண்டில் பரிசுத்த ஆவியின் பல்வேறு செயல்களால் என்ன நம்பத்தக்க நிரூபணம் அளிக்கப்பட்டது?
இந்தச் செயல்கள், கடவுள், 1,500 ஆண்டுகள் வயதாகியிருந்த அந்த இஸ்ரவேலின் சபையைத் தம்முடைய தனிப்பட்ட ஜனமாக அதற்கு மேலும் பயன்படுத்தவில்லை, ஆனால் இப்பொழுது அவருடைய அங்கீகாரம், தம்முடைய ஒரேபேறான குமாரனால் ஸ்தாபிக்கப்பட்ட கிறிஸ்தவ சபைமீதே தங்கியிருந்தது என்பதற்கு காணக்கூடிய அத்தாட்சியை அளித்தது. (எபிரெயர் 2:2-4-ஐ ஒத்துப்பாருங்கள்.)—w92 11/15, பக்கம் 5.
◻ யெகோவாவின் சாட்சிகள் அனுபவிக்கும் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்குக் காரணம் என்ன?
முதலாவதாக, இது கடவுளுடைய ஆசீர்வாதத்தினால்தான். இது கடவுளுடைய வேலை. யெகோவாவின் சாட்சிகள் தங்கள் சுவிசேஷ வேலையில் கற்பிப்பவை யாவும் பைபிளை அடிப்படையாகக் கொண்டவை. கிறிஸ்தவ சபையின் நியமிக்கப்பட்ட தலைவராக இயேசு கிறிஸ்து இருக்கிறார் என்பதை முழுவதுமாக அங்கீகரிப்பதும் அவர்களுடைய வெற்றிக்கு மற்றொரு திறவுகோலாகும்.—w92 12/1, பக்கம் 19.
◻ பத்சேபாளுடன் தொடர்புடைய அவனுடைய பெரிய பாவத்தைக்குறித்ததில் ஏன் யெகோவா தாவீதுக்கு இரக்கம் காண்பித்தார்?
இது முக்கியமாக கடவுள் தாவீதுடன் செய்த உடன்படிக்கையின் காரணமாக, ஆனால் அதோடு தாவீதின் சொந்த இரக்கத்தன்மை மற்றும் அவருடைய உண்மையான மனந்திரும்புதல் காரணமாகவும் ஆகும். (1 சாமுவேல் 24:4-7; 2 சாமுவேல் 7:12; 12:13; சங்கீதம் 51:1, 2, 17)—w93 3/15, பக்கங்கள் 10, 11.
◻ இயேசுவின் மேசியானியத்துவத்தை ஆதரிப்பதாய் கிறிஸ்தவ கிரேக்க வேதவார்த்தைகள் என்ன மூன்று வகையான அத்தாட்சியைக் கொடுக்கின்றன?
இயேசுவின் வம்சாவழி முதல் அத்தாட்சியாக இருக்கிறது. (மத்தேயு 1:1-16; லூக்கா 3:23-38) நிறைவேறிய தீர்க்கதரிசனம் மற்றொரு அத்தாட்சியாக இருக்கிறது. தானியேல் 9:25-ல் காணப்படுவதைப்போன்று சொல்லர்த்தமாக நூற்றுக்கணக்கான தீர்க்கதரிசனங்கள் இயேசுவை மேசியா என்பதாக அடையாளங்காட்டுவதற்கு இருக்கின்றன. மூன்றாவது அத்தாட்சி, கடவுளின் சொந்த சான்றளிப்பாக இருக்கிறது; தம்முடைய சொந்த சத்தத்தால் மூன்று சம்பவங்களில் இதை அவர் கொடுத்தார். (மத்தேயு 17:5; லூக்கா 3:21, 22; யோவான் 12:28)—wE92 12/1, பக்கங்கள் 10, 12.
◻ மத்தேயு 24:37-ல் பதிவுசெய்யப்பட்ட, “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்,” என்ற வார்த்தைகளைச் சொன்னபோது இயேசு எதை அர்த்தப்படுத்தினார்?
நோவா பேழையைக் கட்டிக்கொண்டும், ஜலப்பிரளயம் வந்து அந்த ஊழல்மிக்க உலக அமைப்பைத் துடைத்துக்கொண்டு செல்வதற்கு முன்பு, சில பத்தாண்டுகளைக் கொண்ட ஒரு காலப்பகுதியில் பொல்லாதவர்களை எச்சரித்துக்கொண்டும் இருந்தார். அதேவிதமாக, கிறிஸ்துவின் காணக்கூடாத வந்திருத்தலும் சில பத்தாண்டுகளைக் கொண்ட ஒரு காலப்பகுதிக்கு நீடித்திருக்கிறது; ஒரு பேரழிவில் முடிவுபெறுவதற்கு முன்னதாக, அந்தச் சமயத்திலும் ஓர் உலகளாவிய சாட்சி கொடுக்கப்படுகிறது.—wE92 12/1, பக்கம் 16.
◻ ஒரு நல்ல குடும்ப பைபிள் படிப்புக்குத் தேவையான சில காரியங்கள் யாவை?
படிப்பிற்காகக் காலத்தை வாங்க வேண்டியதாய் உள்ளது. டிவி அல்லது மற்ற பொழுதுபோக்குகளால் அது நெருக்கப்பட நாம் அனுமதிக்கக்கூடாது. குடும்பத்தின் குறிப்பிட்ட தேவைகள் கவனிக்கப்படவேண்டும். பிள்ளைகள் தாங்கள் கற்றுக்கொள்கிறதைப் புரிந்துகொள்கிறார்களா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள நோக்குநிலை கேள்விகளைப் பயன்படுத்துங்கள். (மத்தேயு 17:25) அந்தச் சூழலலைத் தளர்த்தப்பட்ட நிலையில் வைத்துக்கொள்ளுங்கள். உற்சாகமாக இருந்து, எல்லாரையும் படிப்பில் உட்படுத்துங்கள்.—w93 1/15, பக்கம் 17.
◻ இரத்தத்தின் பாகங்கள் உணவுப் பொருட்களுடன் சேர்க்கப்பட்டிருக்குமா என்பதைத் தெரிந்துகொள்ள கிறிஸ்தவர்கள் எந்த அளவுக்கு அக்கறையுள்ளவர்களாய் இருக்கவேண்டும்?
வெறும் சாத்தியத்தால் அல்லது வதந்தியால் குழப்பமடைவதற்கு எதிராக கிறிஸ்தவர்கள் தங்களைக் காத்துக்கொள்ளவேண்டும்; மேலும் விவரக்குறிப்பு சீட்டுகளை சோதிப்பது அல்லது இறைச்சிக் கடைக்காரர்களைக்குறித்து விசாரிப்பதிலும் நியாயத்தன்மை தேவைப்படுகிறது. எனினும், அந்த இடத்தில் இரத்தம் பரவலாக பயன்படுத்தப்படுகிறது என்றால்—உணவில் அல்லது மருத்துவ சிகிச்சையில்—இரத்தத்திற்கு விலகியிருக்கவேண்டும் என்ற கடவுளுடைய கட்டளைக்கு கீழ்ப்படிவதற்கு கிறிஸ்தவர்கள் கவனமாக இருக்கவேண்டும். (அப்போஸ்தலர் 15:28, 29)—w93 1/15, பக்கங்கள் 30-1.
◻ இஸ்ரவேலில் பயன்படுத்தப்பட்ட போதிக்கும் முறைகளின் ஆவிக்குரிய ஆழத்தை எவ்வாறு நீதிமொழிகள் புத்தகம் சிறப்பித்துக் காட்டுகிறது?
‘அனுபவமில்லாதவர்களுக்கு’ ஞானம், சிட்சை, புரிந்துகொள்ளுதல், உட்பார்வை, நிதானம், புத்தி, அறிவு, சிந்திக்கும் திறமை போன்ற மேன்மையான காரியங்களை—இவை அனைத்தையும் ‘யெகோவாவுக்கு பயப்படுதலுடன்’ போதிப்பதே அதன் நோக்கம் என்பதாக நீதிமொழிகள் புத்தகம் காண்பிக்கிறது. (நீதிமொழிகள் 1:1-7; 2:1-14)—w93 2/1, பக்கம் 12.
◻ கல்வியைக்குறித்து இளைஞர் என்ன சமநிலையான நோக்கை இன்று கொண்டிருக்கவேண்டும்?
கிறிஸ்தவர்கள் கல்வியை ஒரு குறிப்பிட்ட பலனை அடைவதற்கான வழியாகவே கருதவேண்டும். அவர்களால் முடியுமானால், முழுநேர ஊழியத்தில் எந்த அளவிற்கு, எவ்வளவு திறம்பட்ட முறையில் முடியுமோ அந்த அளவிற்கு யெகோவாவைச் சேவிப்பதே இந்தக் கடைசி காலத்தில் அவர்களுடைய நோக்கமாகும்.—w93 2/1, பக்கம் 18.
◻ இஸ்ரவேல் தேசத்தார் தசம பாகங்களைச் செலுத்தவேண்டும் என்பதாக யெகோவா ஏன் எதிர்பார்த்தார்?
முதலாவதாக, அவர்கள் வெளிப்படையாக யெகோவாவின் நற்குணத்திற்குத் தங்களுடைய போற்றுதலைக் காண்பிக்க முடியும். இரண்டாவதாக, லேவியர்களை ஆதரிப்பதற்காக அவர்கள் நன்கொடைகள் கொடுக்கமுடியும்; அப்போது அவர்கள் நியாயப்பிரமாணத்தைக் கற்பிப்பது உட்பட தங்களுடைய கடமைகளில் கருத்தூன்றியகவனம் செலுத்தமுடியும். (2 நாளாகமம் 17:7-9-ஐ பார்க்கவும்.)—w93 3/1, பக்கம் 9.
◻ கிறிஸ்தவர்கள் கொண்டுவரும்படியாக கேட்கப்படுகிற தசமபாகம் என்ன? (மல்கியா 3:10)
நம்முடையவற்றின் ஒரு பாகத்தை நாம் யெகோவாவுக்குக் கொண்டுவருவதை அல்லது அவருடைய ஊழியத்தில் பயன்படுத்துவதை இந்தத் தசமபாகம் குறிக்கிறது. அவருக்கு நம்முடைய அன்பையும், நாம் அவருக்கே சொந்தம் என்பதை நாம் உணர்ந்துகொண்டிருப்பதையும், அடையாளமாக இது குறிக்கிறது.—w93 3/1, பக்கம் 15.