“மகத்துவமுள்ள வல்லமை”
ஒரு கிறிஸ்தவன் எவ்வளவு துன்பங்களைச் சகித்துக் கொள்ள முடியும்? இன்று, உலகம் முழுவதிலுமுள்ள கிறிஸ்தவர்கள், வறுமை, குடும்பத்தில் பிளவு, உணர்ச்சி சம்பந்தமான அதிர்ச்சி, வியாதி, போர்கள் மற்றும் துன்புறுத்தலை எதிர்படுகிறார்கள். இவை எல்லாவற்றின் மத்தியிலும் அவர்கள் உத்தமத்தைக் காத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமாக இருக்கிறதா? அது அவ்வாறு இருந்தது என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார். அவர் எழுதினார்: “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு.”—பிலிப்பியர் 4:13.
யெகோவாவிடமிருந்து வரும் பெலன் எல்லாக் காரியங்களுக்கும் போதுமானதாயிருக்கிறது என்பதை சரித்திரம் காண்பித்திருக்கிறது. உதாரணமாக ஜெர்மனியில் நாஸி ஆட்சியின் போது யெகோவாவின் சாட்சிகள் கொடிய துன்புறுத்தலை அனுபவித்திருக்கின்றனர். அவர்கள் சகித்துக் கொண்டனரா? பைபிள் மாணாக்கரும் நாசி ஆட்சியும் புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “எல்லா அடிகள், மிரட்டல்கள் மற்றும் தடையுத்தரவுகள் மத்தியிலும் பகிரங்கமான அவமானம், சிறைவாசம் மற்றும் கான்சன்ட்ரேஷன் முகாம்களில் தடுப்புக்காவல் மத்தியிலும் பைபிள் மாணாக்கர்கள் [யெகோவாவின் சாட்சிகள்] ‘மறுவாழ்வுபெற’ தங்களை ஒருபோதும் அனுமதிக்கவில்லை.”
கான்சன்ட்ரேஷன் முகாம்களில், சாட்சிகள் அவர்களுடைய சட்டைக் கையில் இருந்த சிறிய கருஞ்சிவப்பு முக்கோணங்களால் அடையாளங் கண்டு கொள்ளப்பட்டு விசேஷமாக கொடுமைப்படுத்தப்பட தனியே தெரிந்துகொள்ளப்பட்டனர். இது அவர்களை உடைந்து போகச் செய்ததா? மனோதத்துவர் ப்ரூனோ பெட்டெல்ஹெம், அவர்கள் “மனித கண்ணியத்திலும் ஒழுக்க நடத்தையிலும் அசாதாரணமான உயர்ந்த தகுதியைக் காண்பித்தது மட்டுமல்லாமல், ஆனால் என்னுடைய உளநிலை ஆய்வு வல்லுநர் நண்பர்களும் நானும், ஆற்றலில் மிகவும் குறைவுபடாதவர்கள் என்பதாக கருதிய ஆட்களை வெகு சீக்கிரத்தில் அழித்துவிட்ட அதே முகாம் அனுபவத்துக்கு எதிராக பாதுகாக்கப்பட்டவர்களாக தோற்றமளித்தார்கள்.”
ஆம், அவர்களுக்கு ‘எல்லாவற்றுக்கும் பெலன்’ இருந்தது. ஏன்? ஏனென்றால் அவர்கள் யெகோவாவின் மீது சார்ந்திருந்தார்கள். பவுல் சொன்னார்: “இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.” (2 கொரிந்தியர் 4:7) கடுஞ்சோதனையான நிலைமையை நீங்கள் எதிர்பட வேண்டியிருந்தால், உதவிக்காக யெகோவாவை நம்பிக்கையோடு நோக்கியிருங்கள். அவர் அளிக்கும் மகத்துவமுள்ள வல்லமையினால் பலப்படுத்தப்பட்டு, நீங்கள் சகித்துக் கொள்ள முடியும்.—லூக்கா 11:13.