இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும்
மன்னிப்பதற்கு ஒரு பாடம்
இயேசு இன்னும் தம் சீஷர்களோடு கப்பர்நகூம் வீட்டில் இருக்கிறார். சகோதரர்களுக்கிடையே பிரச்னைகளை எவ்வாறு கையாளுவது என்பதை அவர்களோடு கலந்தாலோசித்துக் கொண்டிருக்கிறார், ஆகையால் பேதுரு கேட்கிறான்: “ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ் செய்து வந்தால், நான் எத்தனை தரம் மன்னிக்க வேண்டும்?” யூத மதப் போதகர்கள் மூன்று தடவை வரை மன்னிப்பு அளிப்பதைப் பற்றி எடுத்துரைத்து இருந்ததால், பேதுரு “ஏழுதரமட்டுமோ?” என்று கருத்துத் தெரிவிப்பதில் அதிக தாராளமாய் இருப்பதாக ஒருவேளை கருதியிருக்கலாம்.
ஆனால் அப்பேர்ப்பட்ட பதிவை வைப்பதன் முழு கருத்தும் தவறாக இருக்கிறது. இயேசு பேதுருவை திருத்துகிறார்: “ஏழுதர மாத்திரம் அல்ல, ஏழெழுபது தரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.” பேதுரு தன் சகோதரனை மன்னிப்பதில் எத்தனை தடவைகள் என்று எல்லை போடக்கூடாது என்று இயேசு காண்பிக்கிறார்.
சீஷர்கள் மன்னிக்க வேண்டியதன் கடமையை அவர்கள் மேல் பதியச் செய்வதற்கு, இயேசு ஓர் உவமையை அவர்களுக்குச் சொல்கிறார். அது ஒரு ராஜா தன் அடிமைகளுடன் கணக்குகளை சரிசெய்ய விரும்புவதைப் பற்றியதாய் இருக்கிறது. பதினாயிரம் தாலந்து (சுமார் 125 கோடி ரூபாய்) என்ற மிகப் பெரிய கடனைக் கொடுக்க வேண்டிய ஓர் அடிமை அவரிடமாக கொண்டுவரப்படுகிறான். அதைச் செலுத்துவற்கு அவனுக்கு ஒரு வழியும் இல்லை. ஆகையால், இயேசு விளக்குகிறபடி, ராஜா அவனையும் அவன் மனைவியையும், பிள்ளைகளையும் விற்று கடனை செலுத்தும்படி கட்டளை கொடுக்கிறார்.
அப்போது அந்த அடிமை தன்னுடைய எஜமானின் பாதங்களில் விழுந்து கெஞ்சுகிறான்: “என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன்.”
அவனுக்காக மனதிரங்கி, எஜமான் அடிமையின் மிகப் பெரிய கடனை இரக்கத்துடன் மன்னித்து விடுகிறார். அவர் அவ்வாறு செய்தவுடனேயே, இயேசு தொடருகிறார், இந்த அடிமை சென்று அவனுக்கு 100 வெள்ளிப் (சுமார் 2,250 ரூபாய்) பணம் கடன்பட்டிருந்தவனாகிய ஓர் உடன் அடிமையைக் காண்கிறான். அந்த மனிதன் தன் உடன் அடிமையை பிடித்து, தொண்டையை நெரித்து, சொல்கிறான், “நீ பட்ட கடனை எனக்குக் கொடுத்துத் தீர்க்க வேண்டும்.”
ஆனால் அந்த உடன் அடிமையிடம் பணம் இல்லை. ஆகையால் அவன் கடன்பட்டிருக்கும் அடிமையின் பாதங்களில் விழுந்து, கெஞ்சுகிறான்: “என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன்.” தன் எஜமானைப் போல் அந்த அடிமை இரக்கமுள்ளவனாய் இல்லை, தன் உடன் அடிமையை சிறைச்சாலையில் போடுகிறான்.
இயேசு தொடர்ந்து சொல்கிறார், என்ன நடந்தது என்பதைப் பார்த்த மற்ற அடிமைகள் எஜமானிடம் போய் சொல்கின்றனர். அவன் கோபத்துடன் அந்த அடிமையை அழைக்கிறார். “பொல்லாத அடிமையே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்து விட்டேன். நான் உனக்கு இரங்கினது போல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்க வேண்டாமோ?” கோபமடைந்தவராய், அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் சிறை அதிகாரியிடத்தில் ஒப்புக்கொடுத்தார்.
பின்பு இயேசு இவ்வாறு முடிக்கிறார்: “நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற் போனால், என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார்.”
மன்னிப்பதில் என்னே ஒரு சிறந்த பாடம்! கடவுள் நமக்கு மன்னித்த பெரிய கடனாகிய பாவத்தோடு ஒப்பிடுகையில், ஒரு கிறிஸ்தவ சகோதரன் நமக்கெதிராக என்ன தவறு செய்தாலும், அது உண்மையிலேயே சிறியது. மேலும், யெகோவா தேவன் நம்மை ஆயிரக்கணக்கான தடவைகள் மன்னித்திருக்கிறார். அடிக்கடி, அவருக்கு எதிராக செய்யும் நம்முடைய பாவங்களை உணர்வதுகூட இல்லை. ஆகையால், குறை சொல்வதற்கு சரியான காரணம் நம்மிடம் இருந்தாலும்கூட, நாம் நம்முடைய சகோதரரை ஒருசில தடவைகளாவது மன்னிக்க வேண்டாமா? மலைப்பிரசங்கத்தில் இயேசு கற்பித்ததை நினைவுகூருங்கள்: “எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.” மத்தேயு 18:21–35; 6:12; கொலோசெயர் 3:13.
◆ தன் சகோதரனை மன்னிப்பதைக் குறித்த பேதுருவின் கேள்வியை எது தூண்டுகிறது? ஒருவரை ஏழு தடவைகள் மன்னிப்பது என்ற அவனுடைய ஆலோசனை தாராளமானது என்பதாக அவன் ஏன் கருதுகிறான்?
◆ இரக்கத்துக்காக தன் அடிமை வேண்டிகொண்டதற்கு ராஜா பிரதிபலித்தது, ஓர் அடிமை தன் உடன் அடிமையின் வேண்டுகோளுக்கு பிரதிபலித்ததிலிருந்து எவ்வாறு வித்தியாசப்படுகிறது?
◆ இயேசுவின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (w88 3/1)