படிப்பு 3
சரியாக உச்சரித்தல்
கிறிஸ்தவர்கள் அனைவருமே அதிக கல்வி பயின்றவர்கள் அல்ல. அப்போஸ்தலர்களான பேதுருவும் யோவானும்கூட ‘ரபீக்களின் கல்வியை பயிலாத சாதாரண மனிதர்’ என அழைக்கப்பட்டனர். (அப். 4:13, NW) இருந்தாலும், வார்த்தைகளைத் தவறாக உச்சரிப்பதால் பைபிள் சத்தியத்தைப் பற்றிய உங்கள் செய்தியிலிருந்து கேட்போரின் கவனம் சிதறாதபடி பார்த்துக்கொள்வது அவசியம்.
கவனிக்க வேண்டிய குறிப்புகள். உச்சரிப்பது சம்பந்தமாக எந்தக் குறிப்பிட்ட விதிமுறைகளும் அனைத்து மொழிகளுக்கும் பொருந்துவதில்லை. அநேக மொழிகள் அகரவரிசை எழுத்துக்களை (alphabetic letters) பயன்படுத்துகின்றன. தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்றவற்றிலும் அகரவரிசைகள் உண்டு. எழுத்துவடிவ சீன மொழியிலோ, அகரவரிசைக்கு பதிலாக பல கூறுகள் கொண்ட அடையாள எழுத்துக்கள் (characters) பயன்படுத்தப்படுகின்றன. இவை ஒரு வார்த்தையை அல்லது வார்த்தையின் ஒரு பாகத்தை பொதுவாக குறிக்கின்றன. ஜாப்பனீஸ் மொழியிலும் கொரியன் மொழியிலும் சீன அடையாள எழுத்துக்களே பயன்படுத்தப்படுகிற போதிலும் அவை மிக வித்தியாசமாக உச்சரிக்கப்படுகின்றன, சிலசமயம் வித்தியாசமான அர்த்தங்களையும் தருகின்றன.
அகரவரிசையை பயன்படுத்தும் மொழிகளில் சரியான உச்சரிப்பு என்பது, ஒவ்வொரு எழுத்திற்கும் அல்லது எழுத்துக்களின் தொகுதிக்கும் சரியான ஒலியை பயன்படுத்துவதை தேவைப்படுத்துகிறது. கிரேக்கு, ஸ்பானிஷ், ஜூலு போன்ற நிலையான விதிமுறைகளை பயன்படுத்தும் மொழிகளில் உச்சரிப்பு அவ்வளவு பெரிய பிரச்சினையாக இருக்காது. என்றாலும் அயல்நாட்டு பாதிப்புகளால் சில வார்த்தைகளின் உச்சரிப்புகள் அவை தோன்றிய மொழிக்கேற்ப அமையலாம். இதன் காரணமாக, ஒரு குறிப்பிட்ட எழுத்து அல்லது எழுத்துக்களின் தொகுதி ஒன்றிற்கும் மேற்பட்ட விதங்களில் உச்சரிக்கப்படலாம்; சிலசமயம் உச்சரிக்கப்படாமலே இருக்கலாம். நீங்கள் அப்படிப்பட்ட விதிவிலக்குகளை ஞாபகம் வைத்து அடிக்கடி உங்கள் பேச்சில் பயன்படுத்த வேண்டும். சீன மொழியில் ஆயிரக்கணக்கான அடையாள எழுத்துக்களை ஞாபகம் வைத்தால்தான் சரியாக உச்சரிக்க முடியும். சில மொழிகளில் ஒரு வார்த்தையின் தொனியை (tone) மாற்றும்போது அதன் அர்த்தமும் மாறிவிடுகிறது. இந்த அம்சத்திற்கு சரியாக கவனம் செலுத்தாவிட்டால் தவறான கருத்துக்களை தெரிவித்துவிடுவோம்.
ஒரு மொழியிலுள்ள வார்த்தைகள் அசைகளால் ஆனவை என்றால், சரியான அசைக்கு முக்கிய அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசியம். இப்படிப்பட்ட அமைப்பைக் கொண்ட பெரும்பாலான மொழிகளில் அழுத்தத்திற்கு பொதுவாக ஒரு முறை உண்டு. ஆனால் இதற்கு விதிவிலக்குகளும் உண்டு; இந்த விதிவிலக்குகளுக்கு உட்பட்ட வார்த்தைகள் அழுத்தக் குறியீடுகளோடு சேர்த்து எழுதப்படுகின்றன. இதனால் சரியாக உச்சரிப்பது ஓரளவு சுலபமாகிவிடுகிறது. ஆனால் அழுத்தத்திற்கு ஒரு முறையே இல்லையென்றால் அது சற்று சிக்கலான பிரச்சினைதான். அதை சமாளிக்க ஏராளமானவற்றை மனப்பாடம் செய்ய வேண்டியிருக்கும்.
உச்சரிப்பைப் பொறுத்தவரை, தவிர்க்க வேண்டிய சில தவறுகள் உண்டு. அளவுக்கு அதிகமான துல்லியத்துடன் உச்சரித்தால் செயற்கையாக தொனிக்கும், ஏன், அலட்டிக் கொள்வது போலும் தொனிக்கும். புழக்கத்தில் இல்லாத உச்சரிப்பும் இப்படித்தான் தொனிக்கும். இதனால் பேச்சாளர்மீது கவனம் ஈர்க்கப்படுவதுதான் மிச்சம். மறுபட்சத்தில், ஏனோதானோவென பேசும் அல்லது உச்சரிக்கும் அளவுக்கு இன்னொரு புறம் சாய்வதை தவிர்ப்பது நல்லது. இவற்றில் சில குறிப்புகள், “வார்த்தைகளைத் தெளிவாக சொல்லுதல்” என்ற பாடத்தில் ஏற்கெனவே கலந்தாலோசிக்கப்பட்டிருக்கின்றன.
வார்த்தைகளின் சரியான உச்சரிப்பு நாட்டுக்கு நாடு வித்தியாசப்படலாம்; ஒரே நாட்டிலும்கூட பிராந்தியத்திற்குப் பிராந்தியம் வித்தியாசப்படலாம். வேறு நாட்டைச் சேர்ந்தவர் உள்ளூர் மொழியை வித்தியாசப்பட்ட பாணியில் பேசலாம். ஒரே வார்த்தைக்கு பல ஏற்கத்தகுந்த உச்சரிப்புகளை அகராதிகள் கொடுக்கலாம். ஒரு நபர் அதிகம் படிக்காதவர் அல்லது தாய்மொழி அல்லாத பிற மொழியை பேசுகிறவர் என்றால், அந்த மொழியை சரளமாக அறிந்தவர்கள் பேசும்போது கவனமாக கேட்டு அவர்களது உச்சரிப்பை அப்படியே பின்பற்றுவது வெகுவாக பயனளிக்கும். யெகோவாவின் சாட்சிகளாக, நாம் பிரசங்கிக்கும் செய்திக்கு கண்ணியம் சேர்க்கும் வகையிலும் நம் பிராந்தியத்தில் உள்ளவர்களுக்கு எளிதாக புரியும் வகையிலும் நாம் பேச விரும்புகிறோம்.
பொதுவாக தினசரி பேச்சில், உங்களுக்கு நன்கு தெரிந்த வார்த்தைகளை பயன்படுத்துவது சிறந்தது. சாதாரணமாக உரையாடும்போது உச்சரிப்பு ஒரு பிரச்சினையாக இருக்காது. ஆனால் நீங்கள் சத்தமாக வாசிக்கும்போது, தினசரி பேச்சில் பயன்படுத்தாத சில வார்த்தைகளைக் காணலாம். மேலும், யெகோவாவின் சாட்சிகளாக நாம் அடிக்கடி சத்தமாக வாசிக்க வேண்டியிருக்கிறது. சாட்சி கொடுக்கும்போது மக்களுக்கு பைபிளிலிருந்து வாசித்துக் காட்டுகிறோம். சில சகோதரர்களுக்கு, காவற்கோபுர படிப்பின்போது அல்லது சபை புத்தகப் படிப்பின்போது பாராக்களை வாசிக்கும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. நாம் திருத்தமாக வாசிப்பது முக்கியம்; வார்த்தைகளை தவறாக உச்சரிப்பதன் மூலம் செய்தியிலிருந்து கவனத்தை திசைதிருப்பாமல் இருப்பதும் முக்கியம். அயல்நாட்டு மக்களின் பெயர்களையும் இடங்களின் பெயர்களையும் பைபிளிலும் மற்ற பிரசுரங்களிலும் சரளமாக வாசிப்பது சிலருக்கு கஷ்டமாக இருக்கலாம். அப்போது என்ன செய்யலாம்? முன்கூட்டியே அந்தப் பெயர்களை கவனமாக வாசித்து, திரும்பத் திரும்ப சொல்லிப் பழகலாம்.
முன்னேறுவதற்கான வழிகள். சரியாக உச்சரிக்க முடியாத அநேகர், தங்களுக்கு அப்படிப்பட்ட ஒரு பிரச்சினை இருப்பதையே உணர்வதில்லை. உச்சரிப்பதில் நீங்கள் முன்னேற வேண்டிய அம்சங்களை பள்ளிக் கண்காணி சுட்டிக்காட்டுகையில் அதை நன்றியுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். பிரச்சினை இருப்பது தெரிந்தவுடன், நீங்கள் எவ்வாறு முன்னேறலாம்?
முதலாவதாக, சத்தமாக வாசிக்கும் நியமிப்பை பெறும்போது அகராதியை எடுத்துப் பார்க்க நேரமெடுங்கள். தமிழ் போன்ற சில மொழிகளில் வார்த்தைகளின் உச்சரிப்புகள் ஓரளவு தெளிவாக இருக்கின்றன; ஆனால் மற்ற மொழிகளில், எந்த அசைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் அல்லது எந்த ஒலிகளை பயன்படுத்த வேண்டும் போன்ற பயனுள்ள தகவல்களை அகராதிகள் தரலாம். உங்களுக்குத் தெரியாத வார்த்தைகளை அகராதியில் பாருங்கள். அகராதியைப் பயன்படுத்தி பழக்கமில்லை என்றால் அடையாள குறிகளின் விளக்கத்தை முதல் பக்கங்களில் பார்க்கலாம் அல்லது தேவைப்பட்டால் அவற்றை விளக்கும்படி எவரையாவது கேட்கலாம். நீங்கள் எந்த வார்த்தையை எடுத்துப் பார்த்திருந்தாலும் அகராதியை மூடுவதற்கு முன் பலமுறை அதை சத்தமாக சொல்லிப் பாருங்கள்.
உச்சரிப்பை மேம்படுத்துவதற்கு இரண்டாவது வழி, நன்கு உச்சரிப்பவரிடம் வாசித்துக் காட்டி, தவறுகளை சுட்டிக்காட்டும்படி கேட்பதாகும்.
உச்சரிப்பை மேம்படுத்துவதற்கான மூன்றாவது வழி, நல்ல பேச்சாளர்களின் பேச்சை கவனமாக கேட்பதாகும். புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் அல்லது காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள் ஆடியோகேஸட்டில் கிடைத்தால் அவற்றை நன்கு பயன்படுத்துங்கள். கேட்கும்போது, வித்தியாசமாக உச்சரிக்கப்படும் வார்த்தைகளை கவனியுங்கள். அவற்றை எழுதி வைத்து, உச்சரித்துப் பழகுங்கள். காலப்போக்கில், தவறான உச்சரிப்புகளே உங்கள் பேச்சில் இருக்காது. இதனால் உங்கள் பேச்சுத் திறமை வெகுவாக அதிகரிக்கும்.