பின்பற்ற ஒரு முன்மாதிரி
சிலியிலிருந்து விழித்தெழு! நிருபர்
சுமார் 1,70,000 மக்கள் வாழும் வட சிலியிலுள்ள அன்டோஃபகஸ்டாவில், ஜாகோமோ காஸ்டெலி என்பவர் தனது அப்பார்ட்மென்ட்டில் வசிக்கிறார். கடந்த ஜூன் மாதம், அப்பகுதியிலிருந்த பூங்காவில் ஆட்கள் கூட்டமாக கூடியிருந்ததை அவர் தன் வரான்டாவிலிருந்து பார்த்தார். “ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், வயசுப் பிள்ளைகள் அவர்களது அம்மா அப்பாவோடு சேர்ந்து சிரித்துக்கொண்டு குஷியாக இருந்தனர்,” என்பதாக எல் மெர்க்கூர்யோ என்ற செய்தித்தாளுக்கு அவர் எழுதினார். தான் பார்ப்பது கனவல்ல நிஜம்தான் என்பதை உறுதிசெய்ய அவர் கீழே இறங்கி பூங்காவிற்குச் சென்றார்.
“அங்கு இன்னொரு ஆச்சரியம் எனக்குக் காத்திருந்தது,” என எழுதினார் அந்த ஆர்வமிக்க மனிதர். “சில குடும்பங்கள் சாப்பிட்டு முடித்தவுடன், அவர்களில் ஒவ்வொருவரும் புல்தரையில் தப்பித்தவறி போட்டுவிட்ட பொருட்களையெல்லாம் பொறுக்கி அவரவரது குப்பைக்கூடையில் போட ஆரம்பித்தனர். . . .
“இந்த அபூர்வ ஆட்கள் யார் என நான் தெரிந்துகொள்ள விரும்பினேன்,” என தொடர்ந்து எழுதினார். “ஒரு அழகான பெண்ணிடம் சென்றேன், அவள் சாதாரண அழகியே அல்ல, முடிசூடா அழகு ராணி. இனிய குரலில் அவள் என்னிடம் இப்படிச் சொன்னாள்: ‘நாங்கள் யெகோவாவின் சாட்சிகள், ஒரு அசெம்பிளிக்காக ரெச்யோனால் ஸ்டேடியத்தில் நாங்கள் கூடுகிறோம்.’ ” அந்த வட்டார மாநாட்டிற்கு சென்றிருந்த 3,000-க்கும் அதிகமான ஆட்கள் மதிய இடைவேளையின்போது உணவு சாப்பிடுவதற்கு பூங்காவிற்கு சென்றிருந்தனர்.
“நான் ஒரு அப்போஸ்டலிக் ரோமன் கத்தோலிக்கன்,” என அவர் எழுதினார். “பூசைக்கு தவறாமல் செல்கிறேன், சில வருடங்களுக்கு முன்பு பிரான்ஸிலுள்ள லூயர்ட்ஸூக்கு யாத்திரையும் சென்றுவந்தேன்.
“ஆனாலும் நான் முழுக்கமுழுக்க ஒரு கிறிஸ்தவனாக வளர்க்கப்பட்ட மரியாதைக்கு என்னையே இப்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும்: சிலியில் பெரும்பான்மையினரது மதமான கத்தோலிக்க மதத்தில் இல்லாதது அப்படி என்னதான் அவர்களிடம் இருக்கிறது? அவர்களது பருவ வயதுப் பிள்ளைகள் அம்மா அப்பாவோடு அவ்வளவு ஆனந்தமாக இருக்கும்போது, ஒன்றுசேர்ந்து வெளியே போகலாம் என நான் சொல்லி வாயை மூடுவதற்குள் ஏன் என் மூன்று மகள்கள் மாத்திரம் தலைதெறிக்க ஓடுகிறார்கள்?
“இந்தப் பிள்ளைகள் சமாதானமாய், குஷியாக, சுற்றுப்புறத்தைக் குறித்து அக்கறையுள்ளவர்களாய் இருக்கும்போது ஏன் எங்கள் கத்தோலிக்கப் பிள்ளைகள் மாத்திரம் முரட்டுத்தனமாய் இருக்கின்றனர், கூச்சல் போட்டுக்கொண்டு ‘பவர் ரேஞ்சர்களை’ வைத்து விளையாடுகின்றனர், மற்ற பிள்ளைகளை அடிக்கின்றனர், . . . ? நமது புன்னிய ஸ்தலங்களான லா டிரானா, ஆப்டாகோயோ மற்றும் இதுபோன்ற மிகப் புனிதமான ஆலயங்களைச் சுற்றி இப்போது நாம் காணும் அருவருக்கத்தக்க வியாபாரங்கள் சிறிதும் இல்லாத மாநாடுகளை கத்தோலிக்கர்களாகிய நாம் ஏன் நடத்தக்கூடாது?”
காஸ்டெலி அவர்கள், செய்தித்தாளுக்கு எழுதிய தனது கடிதத்தை இந்தக் கேள்வியோடு முடித்தார்: “கத்தோலிக்கர்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் கருதிக்கொள்ளும் நாம் எப்போதாவது அவர்களைப் போல மாறுவோமா? அப்படிச் செய்ய ஆண்டவரும் கன்னி மாதாவும் நமக்கு உதவுவார்களாக.”