இயற்கையின் கண்ணீர்த்துளிகள்
அதிகாலையில், குளிர்ந்த அமைதியான காற்று. ஒவ்வொரு இலையும் புல்லின் இதழும் நீர்த்துளிகளால் மினுக்கு மினுக்கென, விடியலின் ஒளியால் ஜொலித்துக்கொண்டிருக்கின்றன. ஒரு விதத்தில், கதிரவனின் உதயத்தைப் பசுந்தழைகள் ஆனந்தக்கண்ணீர் வடித்து வரவேற்பதுபோல் தோன்றுகிறது. பனித்துளிகள் கவிஞர்களையும் புகைப்படக்காரர்களையும் தூண்டுவிப்பதில் சிறிதும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆயினும், பனித்துளிகள் மனித உயிருக்குப் புத்துயிர் அளிப்பதைக்காட்டிலும் அதிகத்தைச் செய்கின்றன. இந்த வளிமண்டல இயல்நிகழ்ச்சி, துருவப் பிரதேசங்களைத்தவிர முழு பூகோளத்திற்கும் பொதுவிலுள்ள உயிர்காக்கும் ஈரப்போர்வையாகும். இரவில் குளிரும்போது, சில சூழ்நிலைகளின்கீழ் தட்பவெப்ப நிலை பனித்துளிகளை உருவாக்குமாறு, யெகோவா வளிமண்டலத்தை வடிவமைத்துள்ளார். இந்தத் தட்பவெப்ப நிலையில் காற்றினால் மேற்கொண்டும் தன்னுடைய ஈரத்தைத் தக்க வைத்திருக்க முடிவதில்லை, சூழ்ந்துள்ள காற்றைவிட அதிக குளிர்ச்சியான மேற்பரப்பில் அது வைத்துவிடுகிறது. தாகத்தோடு இருக்கும் தாவரங்கள் தங்களுடைய எடைக்குச் சமமான பனித்துளி நீரை உறிஞ்சி, அதிலிருந்து பெரும்பகுதியை வேர்கள் மூலம் மண்ணில் சேமித்து வைக்க வெளியேற்றுவதற்கு அறியப்பட்டுள்ளன.
பைபிள் பிரதேசங்களில், நீண்ட வறட்சியான பருவத்தில், சில சமயங்களில் தாவரங்களுக்கு இருக்கும் ஒரே நீர் மூலம் பனித்துளிகள் மட்டுமே. எனவே, பைபிளில் பனித்துளியானது பெரும்பாலும் பயிர் விளைச்சலோடும் பனித்துளி குறைந்திருத்தல் பஞ்சத்தோடும் தொடர்புபடுத்தப்படுகிறது.
பனித்துளி மிகவும் தனிப்பட்ட அர்த்தத்தையும் கொண்டிருக்கக்கூடும். கடவுளுடைய ஜனங்களுக்குத் தன்னுடைய பிரியாவிடை பாட்டில் மோசே எழுதினார்: “மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும்; பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும்.” (உபாகமம் 32:2) மோசே பேசிய வார்த்தைகள் உயிரளிக்கும் பனித்துளியைப்போன்றது. மனிதரிலேயே மிகுந்த சாந்தகுணமுள்ளவனாக இருந்தபடியால், இயல்பாகவே மென்மையாகவும் தன்னுடைய பேச்சிலும்கூட பரிவோடு இருந்தார் என்பது நிச்சயம். (எண்ணாகமம் 12:3) பனித்துளி அல்லது மென்மையான மழையைப் போல, அவருடைய வார்த்தைகள் நாசம் விளைவிக்காமல் போஷித்தது.
இன்னொரு சமயத்தில் நீங்கள் இயற்கையின் கண்ணீர் துளிகளான காலைப் பனித்துளியின் மென்மையான அழகில் வியப்படைகையில், பனித்துளியை சிருஷ்டித்தவருடைய பிரமிக்கவைக்கும் ஞானத்தைத் தீர எண்ணிப்பார்க்க விரும்பக்கூடும்.